|
ஒலி, ஒளி, ஒழி
கிடுகிடுக்கும் இடிமுழக்கம் எங்ஙனோ கேட்கும்
கிலிபிடித்து நடுங்குவார் குண்டொலியோ என்று
வெடுக்கெனப் பாய்ந்தொளிதெறிக்கும் மின்னல்அதை, "குண்டு
வெடித்துத் தீபரவியதோ என்றஞ்சிச் சாவார்!
"கொடுமையிலும் கொடுமையடா போர்நடக்கும் மண்ணில்
குடியிருக்கும் மனிதர்நிலை ஐயகோ!" என்பார்
கெடுமதியால் சண்டையிட்டுச் செத்தொழியும் மனிதன்
கேவலம் ஆறறிவிருக்கும் உயர்திணையாம் சீச்சீ!!
செல்...நில்
செல்லும்வழி நமையழைத்துச் செல்லும் இந்தச்
சிறுமனந்தான் தீவழிக்கும் நமை யழைக்கும்!
மெல்லமெல்லக் கொல்லுங்கொடும் எய்ட்ஸ் நோய்க்கு
வீணிலிங்குப் பலியாகும் மனிதா கேள்! கேள்!
துல்லியநம் மனத்தில்இரு தூண்டும் சக்தி
தொடர்ந்துநமை அலைகழிக்கும் இருந்த போதும்
நல்லவழி காட்டுமொன்று மற்று மொன்று
நாசவழி காட்டும்போ காதே நில்! நில்!
சில்லறை
புல்லறிவை வளர்க்கின்ற பொல்லாத சினிமா
பொய்க்கதைகள் படிவாழும் போக்கிரிகள் இங்கு
வல்லமையைத் தமக்குள்ளே வன்முறையில் காட்டி
மாத்தமிழர் மானத்தை வாங்குகின்றார் அந்தோ!
நல்லறிவை வளர்க்கின்ற ஞானமின்றி நாளும்
நாசவழி சென்றிடவே நாட்டம் கொள்கின்றார்!
சில்லறைகள் செய்கின்ற சிறுசெயலால் இந்தச்
செகத்தினிலே தமிழருக்குச் சிறிதும் மதிப்பில்லை!
முரண்
பருவமும் அழகும் பெற்று
பக்குவம் அடைந்த பெண்ணுக்கு
ஒருவரன் பார்க்க எண்ணி
ஒருவனைப் பேசி வந்தார்!
பொருத்தங்கள் பொருந்தி வந்தும்
திருமணம் நடக்க வில்லை!
இருவரும் சாதி என்னும்
இணைப்பில் முரணாம் கண்டீர்!
கடற்கரை
உடல்உயிர் சிறிதென் றெண்ணி
உரிமையே பெரிதென் றெண்ணித்
தொடர்ந்தொரு போர்நடத்தி
தோன்றிடும் வெற்றி என்றே
திடமனப் புலிகள் செய்யும்
சீரிய முயற்சி யெல்லாம்
கடற்கரை மணற்கோட்டைப் போல்
கரைந்துதான் போமோ அந்தோ!
கோபுரம்
கோபுர நிலைக்கு உயர்ந்து
கோடிகள் குவித்திருப்பார்!
பேர்புகழ் வேண்டி இங்குப்
பிறர்க்கெனக் கொடை யளிப்பார்!
சீர்பெற வழி யில்லாத
செந்தமிழ் மொழிதழைக்க
நேர்பட சென்று நல்க
நெஞ்சிலே பற்று மில்லார்!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|