|
"தமிழில்முடி யாததென்ன?", "தமிழில்எது இல்லை?" எனத்
தமைமறந்து பேசுவதால் தமிழிங்குத் தழைத்திடுமோ?
நமதருமை தமிழ்செழிக்க நல்லதமிழ்க் கலைச்சொற்கள்
அமைப்பதுநம் முதற்கடமை அறிஞர்காள் சிந்திப்பீர்!
ஒப்பில்லாத் தமிழென்றும் உயர்தனிச்செம் மொழியென்றும்
எப்போதும் பிதற்றுவதால் இன்தமிழ்தான் செழித்திடுமோ?
தப்பாது பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளி அனுப்பிவைப்பீர்?
அப்போது தான்தமிழின் அடையாளம் இங்கிருக்கும்!
"முத்தமிழ்தான் உலகத்தின் மூத்தமொழி பிறமொழிகள்
அத்தனையும் அருந்தமிழின் பின்வந்த மொழி"என்று
இத்தனைநாள் இறுமாந்(து) இருந்துவிட்டோம்! புவிபோற்றும்
புத்தகங்கள் என்செய்தோம்! புகழ்பேசி திரிகின்றோம்!
"பிறமொழியில் "ழ" கரஒலி சிறப்பில்லை! தமிழின் தனிச்
சிறப்பிதுவே" எனப்பேசிப் பீற்றுவது போதுமடா!
அறிவியலில் வளர்ச்சிபெறா அவனிமொழி எம்மொழியும்
மறைந்துவிடும்! அறிவியலின் வழிசெல்ல செயல்புரிவீர்!
மயக்குமொழி பேசுகின்ற மழலைகட்குப் பிறமொழியைப்
பயிற்றுவித்து, தாய்மொழியாம் பைந்தமிழைப் புறக்கணித்தால்
அயன்மொழியில் உரையாடி அசல்இனத்தின் நிலைமாறிச்
சுயமொழிசெந் தமிழ்மறந்த தலைமுறையும் தோன்றிவிடும்!
நிகழ்கால உலகத்தின் நிலைமறந்து பழம்பெருமை
புகழ்பாடிக் காலத்தைப் போக்கியது போதுமினி!
செகம்போற்றும் கணினியிலே செந்தமிழை இயல்பாக்கி
சிகரத்தில் தமிழ்நிற்கச் செய்திடுவீர் செயலின்றே!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|