|
எழுத்துக்கு எழுத்தென்னும்
எதிர்கணைகள் தொடுக்காமல்
கொழுத்துப்போய் நாளேட்டைக்
கொளுத்துவது, தமிழ்த்தாயை
இழுத்துப்போய்த் தெருவினிலே
எரித்தசெயல், தமிழேட்டின்
கழுத்துக்குத் தமிழனே
கத்திவைக்கும் செயல்நன்றோ?
கொற்றவரே ஆனாலும் குற்றமொன்று
செய்துவிட்டால்
உற்றதொரு தவற்றையெடுத்(து)
உரைப்பதுநம் கடமையன்றோ?
நற்றமிழர் நலம்பேணும் நளேட்டைக்
கொளுத்துவது
கற்றவரின் செயலாமோ? காளையர்க்(கு)
அழகாமோ?
நாளைய தலைவர்கள்! நற்றமிழின்
காவலர்கள்!
தோளுக்குத் தோள்கொடுக்கும்
தோழர்கள்! வெறுஞ்செய்தி
தாளென்றா கொளுத்தினர்!செந்
தமிழையன்றோ கொளுத்தினர்! ஓ!
காளையர் கூட்டத்தின் கண்ணியத்தை
இழந்தனரே!
துப்பறிந்த உண்மைகளைத்
தொட்டெழுதும் நாளேட்டின்
அப்பழுக்கை அறியாமல் அணுகுமுறை
தெரியாமல்
எப்பழிக்கும் அஞ்சாமல் எரித்தனர்
நாளேடுகளை!
தப்பிழைத்து விட்டனர்தம்
தாய்மொழிக்கே தீவைத்து!
ஒருபக்கம் துதிபாடி உண்மைக்குப்
புறம்பாக
இருபக்கம் எழுதிடினும்
என்றும்பொய்மெய் ஆகாது!
கருத்துக்கு மறுகருத்துக்
காணாமல், நாளேட்டை
நெருப்புக்கு இறையாக்கி
அருந்தமிழைப் பழிக்காதீர்!
குறைகூறி எழுதுபவர் கூற்றுகளை
ஆராய்ந்து
கறைபோக்க முனையாமல் களங்கத்தைப்
போக்காமல்
முறைகெட்டுக் காளையரின் மூளையிலே
வெறுப்பேற்றி
நிறைகொண்ட தமிழுக்கு
நெருப்பிடுதல் முறையாமோ?
வாளா விருப்பதற்கும் வாய்மூடிக்
கிடப்பதற்கும்
கோளாற்றை மறைப்பதற்கும் குணமொன்றே
போற்றுதற்கும்
நாளேடு வேண்டுமெனில் நடைமுறையில்
சாத்தியமோ?
தூளாக வேண்டுமிந்தத் துப்புகெட்ட
சிந்தனைகள்!
நமக்கிருக்கும் சிக்கல்கள
நாள்தோறும் எழுதிவரும்
தமுக்கடிக்கும் தலைவர்களின்
தராதரத்தை வெளிப்படுத்தும்
தமிழ்பரப்பும் நாளேட்டின்
தருமத்தை அவமதித்திங்(கு)
அமுக்குவதே திட்டமென அருந்தமிழைப்
பழிப்பதுவோ?
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|