|
ஆரிய வழக்கம் போற்றி ஆங்கில மொழியே பேசி
பேரிலே தமிழ ரென்று பெற்றியில் இரண்டுங் கெட்டுப்
பூரிய தமிழ ராகப் புவியினில் வாழு கின்றார்!
பாரிலே இவரைப் போன்ற பதடிகள் கண்ட துண்டோ?
அருந்தமிழ் மொழியில் ஆக, ஆகவே, எனவே என்னும்
பொருந்திய சொல் லிருக்க ஆங்கிலப் புலமை காட்ட
ஒருசில தமிழர் பேச்சுக் கொருதரம் "so, so"
என்பார்!
இருமொழி கலந்து பேசி இன்தமிழ்க்(கு) இழுக்குச் செய்தார்!
எழுத்திலா இனமென் றாலும் இரவலுக்(கு) எழுத்தைப் பெற்று
மொழிவளம் பெருக்கி வாழ்வில் முன்னுக்குச் செல்கின் றார், ஆ!
விழிநிகர் மொழி யிருந்தும் வியன்மிகு எழுத் திருந்தும்
இழிமனத் தமிழர் ஏதும் இல்லார்போல் வாழ்கின் றாரே!
கன்னல்செந் தமிழில், சுன்னம், சுழியெனும் சொல் லிருக்க
இன்னும்நம் தமிழர் ஏனோ "பூஜ்ஜியம்", "சைபர்" என்பர்!
அந்நிய மொழி மோகத்தால் அந்தமிழ்க்(கு) உரிய அந்தச்
சுன்னமும் சுழியும் இன்று சுவடிலா(து) ஒழிந்த தன்றோ?
இனித்திடும் இலக்கி யங்கள் இணையிலாக் கலைகள் பண்பா(டு)
அனைத்துமே இருந்தும் ஏனோ அவனியில் தமிழர் இன்று
தனிவகை தன்மை கெட்டு தன்மானம் தானும் அற்றுக்
கனித்தமிழ் இனத் தவர்க்கே களங்கமாய் வாழு கின்றார்!
வெள்ளையன் தமிழ் படித்து வியந்துநாம் விழி பிதுங்க
தெள்ளிய தமிழில் பேசிச் சிந்தையைக் கவரக் கண்டேன்!
எள்ளலுக்(கு) உரிய இந்த இளிச்சவாய் தமிழ னுக்குப்
பள்ளியில் தமிழ் படித்தும் தமிழ்வர வில்லையாம்!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|