|
சித்திரை தமிழ்ப்புத் தாண்டா? தெளிவிலார் சொன்ன சொல்லாம்!
இத்தரைத் தமிழர்க் கெல்லாம் இனியதோர் செய்தி சொன்ன
முத்தமிழ்க் கலைஞர் அந்த முதல்வரின் சொல்லே சொல்லாம்!
புத்துயிர் அளிக்க வேண்டிப் போற்றுவோம் தமி்ழ்ப்புத் தாண்டை!
பற்பல அறிஞர் கூடிப் பகர்ந்ததைப் பற்றி டாத
சொற்பரே சித்தி ரையே தொடர்ந்திட வேண்டு மென்பர்!
கற்பது தமிழ் என்றானால் காலமும் தமிழ் நிலைத்து
நிற்பதில் எண்ணம் கொண்டார் நினைப்பது தையே அன்றோ?
அறுவடை நாளே பொங்கல் அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு!
நிறுவிய கலைஞ ருக்கும் நேரிய புலவ ருக்கும்
பொறுப்புடன் நன்றி சொல்வோம்! புரிந்திடா தவர்க்கு நெஞ்சம்
உறுத்தினால் சித்தி ரையில் உழலட்டும்! கவலை யென்ன?
எத்தனை காலம் அந்தோ! இதற்கெனக் காத்தி ருந்தோம்
பத்திய மிருந்து கண்ட பலனென, தீர்ந்தோம் நோய் காண்!
முத்திரை பதித்த பின்னும் முயன்(று) அதைக் கெடுப்பதற்குப்
புத்தியில் தெளிவில் லாரே புகுவரென்று அறிந்து கொண்டோம்!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|