|
ஓதி உணர்ந்த செந்தமிழை உயிராய் மதிக்கும் தமிழரிடம்
மோதிப் பார்க்க நினைத்தாரா முற்றும் தெரிந்த நீதிபதி?
நாதி யற்ற தமிழ்ப்பள்ளி நன்மை காணும் வழிமுறையை
வாதிட் டாரா? வாரியவர் வழங்கி னாரா? என்செய்தார்?
பள்ளி தோறும் பயணம் சென்று பார்த்தறிந்த உண்மைகளை
மெள்ள எழுதிச் சொன்னாரா? வேண்டு கின்ற உதவிகளை
அள்ளி அவர்தான் தந்தாரா? அரசின் உதவி வேண்டு மென்று
துள்ளி யெழுந்து கேட்டாரா? தோள்கொடுக்க வந்தாரா?
அலையாய் நெஞ்சில் என்றென்றும் ஆர்ப்பரிக்கும் தமிழுணர்வைக்
கொலையா செய்ய முடியும்? குருதி கலந்த உறவன்றோ!
நிலையாய் நிற்கும் தமிழ்மீது நீதிபதிக்(கு) ஏன் புழுக்கமோ?
மலையாளத்துப் பள்ளியெனில் மனமறிந்து சொல்வாரா?
குறையிருக்கும் பிறவிகளைக் கொன்றழிக்க வேண்டுமெனில்
பொறையிருக்கும் பூமியிது புழுதிக் காடாய் ஆகாதோ?
நிறையிருக்கும் நேர்மையர்கள் நீதிபதிகள் என்றிருந்தோம்!
கறையிருக்கும் கசடருமா கனம் பொருந்தும் நீதிபதி?
விளைவை அறிந்தும் தயங்காமல் வினைய மென்றே எழுதிவிட்டு
வளைந்து கொடுக்க மறுக்கின்றார்! மன்னிப்
புக்கும் இணங்கவில்லை!
இளைத்த இனம்நாம் எனும்நினைப்பில் இருக்கின்றாரோ?
முளைக்கும் இவர்போல் முட்செடியை முளையிலே கிள்ளவேண்டும்!
விழிதிறந்து மொழிவளர்க்க விளங்கும் நமது பள்ளிகளை
அழித்தொழிக்க வேண்டுமென ஆவல் நீதிபதிக்கு உண்டாம்!
குழிபறிக்கக் காத்திருக்கும் குள்ள நரியின் ஆவலிதோ?
மொழி நிலைக்க பள்ளியொன்றே மூலம் தமிழா விழித்தெழுக!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|