|
செம்மொழியாம் பைந்தமிழில் சீரியநல் இலக்கியத்தை
நம்மொழியில் கற்பதற்கு நமக்குரிமை இல்லையா?
"இம்மலைய நாட்டினிலே எல்லார்க்கும் உரிமையுண்டு
எம்மொழிக்கும் உரிமையுண்டு" என்றுசொன்ன அறிஞர் எங்கே!
கற்றலில்லார் செய்கின்ற காரியத்தைப் பட்டங்கள்
பெற்றவர்கள் செய்கின்ற பேதைமையை என்னென்பேன்!
மற்றவரின் உரிமையிலே மதிகெட்டுக் கைவைக்கும்
பெற்றியினை இனிமறப்பீர்! பிறர்முதுகில் ஏறாதீர்!
செழுந்தமிழை அழிப்பதற்குத் திட்டங்கள் தீட்டிவரும்
இழிஞர்களின் கூட்டத்தை இட்டம்போல் விட்டுவிட்டால்
மொழியழியும் இனமழியும் முதுகலையும் அழிந்திடுமே!
விழிப்புறுக செந்தமிழீர்! வேண்டாமே இனிபொறுமை!
தமிழுக்கு இன்னலென்றால் தாங்காத நெஞ்சங்களே!
தமிழுக்கு அணிசேர்த்துத் தாலாட்டும் கவிஞர்களே!
அமுதொத்த தமிழென்று ஆர்ப்பரிக்கும் அறிஞர்களே!
தமிழின்று பிறர்கையில் தத்தளிக்கும் நிலைகாணீர்!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|