|
அமிழ்தின் சுவைதமிழுக்(கு) உண்டு - இதை
அறிந்திடா திருப்பவன் அறிவிலா மண்டு!
தமிழெனும் அமுதத்தை உண்டு - நான்
தரணியில் வாழ்ந்திடு வேன்புகழ் கொண்டு!
இன்றமிழ் பழியுற்றால் கொதிப்பேன்! - அதை
இழிவுறப் பேசிடும் நீசனை மிதிப்பேன்!
என்றமிழை உயிரென மதிப்பேன்! - மண்ணில்
இனிப்பிறந் தாலொரு தமிழனாய் உதிப்பேன்!
தமிழ் மறந்தவனை இகழ்வேன்! - செந்
தமிழுக்குத் தொண்டுசெய் பவனைப் புகழ்வேன்!
தமிழ்நெறி பண்பொடு திகழ்வேன்! - மண்ணில்
தமிழனாய்ப் பிறந்ததை எண்ணியே மகிழ்வேன்!
என்இனம் துன்புற்றால் துடிப்பேன்! - தமிழர்க்கு
இன்னல்யார் செய்யினும் அவருயிர் குடிப்பேன்!
கன்னல்செந் தமிழ்க்கவி வடிப்பேன்! - எக்
காலமும் தமிழர்க்கே வாழ்வினை முடிப்பேன்
அன்பர்கள் உறவில்தான் பிழைப்பேன் - என்
ஆயுள் முழுவதும் தமிழுக்கே உழைப்பேன்!
இன்பத் தமிழினால் தழைப்பேன்! - எனது
இவ்வுடல் உயிரிலும் தமிழையே குழைப்பேன்!
வள்ளுவன் வழியிலே உய்வேன்! - தன்
மானமற்(று) உய்திடும் தமிழனை வைவேன்!
தெள்ளிய தமிழ்த்தொண்டு செய்வேன்! - என்
செந்தமிழ் மக்களின் மீதன்பைப் பெய்வேன்
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|