|
இடைவண்ண நளினங்கள் வளைந்தாடும் பூங்கொடி! - உன்
இருவிழிகள் துள்ளும்கயல் கெண்டைகளின் பாங்கடி!
அடியேனை உன்மடியில் சேய்போல தாங்கடி! - அடி
ஆயிழையே நீபிரிந்தால் துன்பந்தான் ஈங்கடி!
நீமொழியும் சொல்லெல்லாம் தித்திக்கும் தேனடி! - அடி
நேரிழையே உன்பற்கள் முல்லைவண்ணம் தானடி!
பூமகளே உன்மீது பித்துகொண்டேன் நானடி! - உன்
பொன்முகத்தில் வெறுப்பினைநீ காட்டுவதும் ஏனடி?
என்னன்பே என்றுசொல்லி என்னுறவைப் பேணடி! - உன்
இருகரத்தை என்தோளில் பூச்சரமாய்ப் பூணடி!
உன்னாலே வாடுகின்ற என்னிலையைக் காணடி! - இந்த
உலகத்தில் உன்னையன்றி என்வாழ்வும் வீணடி!
எனையுன்றன் நெஞ்சத்தில் நூல்போலத் தையடி! - என்
இதயத்தின் ஏக்கத்தை நீதீர்த்து வையடி!
இனிக்கின்ற புத்தமுதே இவ்வுலகம் பொய்யடி! - அடி
எழில்ராணி என்காதல் என்றென்றும் மெய்யடி!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|