|
"பெண்ணில்உன் போலொரு அழகி
பிறிதோர் உலகிலும் இல்லை" என்றேன்
கண்ணிலே வெறுப்பினைக் காட்டி
காதலை அகத்திலே மறைத்தாள்!
"மலர்போன்ற அழகிய உன்றன்
மங்கலப் பொன்னெழில் நெஞ்சில்
விலகித்தான் போகுமோ?" என்றேன்
"வீண்மொழி போதுமே!" என்றாள்!
"உன்னைஎன் நெஞ்சத்தில் வைத்து
ஒவ்வொரு நாளும் பூசித்தேன்!
சொன்னசொல் உண்மைகாண்" என்றேன்
சொல்வது பொய்யென மறுத்தாள்!
"கடலது வற்றினும் தென்றல்
காற்றது அடங்கினும் வையம்
உடைந்திரண் டாயினும் மறவேன்
உன்னை" என்றதும் முகமலர்ந்தாள்!
"உயிரையும் தூசென மதித்தேன்!
உன்னையே வாழ்வெனக் கொண்டேன்!
சுயமடி என்காதல்!" என்றேன்!
தோகையும் மறுமொழி சொன்னாள்!
"இன்றுடன் ஈருயிர் ஒன்றாய்
என்றுமே இணைந்துநாம் வாழ்வோம்"
என்றவள் என்தோளில் சாய்ந்தாள்!
இன்பம் விளைந்ததே ஆங்கே!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|