|
மொட்டவிழ்ந்த தாமரைபோல்
முகமலர்ந்த பூங்கொடியாள்! - அவள்
வட்டவிழிப் பார்வையிலே
வையகத்தை வீழ்த்திடுவாள் - ஆ!
சொட்டுமலர்த் தேனொழுகும்
சுவைததும்பும் செவ்விதழாள் - அட!
கட்டழகி கன்னியவள்
காதலன் நான் இல்லையே!
கட்டிஎனைக் கவர்ந்திழுக்கும்
கன்னம்மது கிண்ணத்தாள் - எழில்
பொட்டிருக்கும் நெற்றியின்கீழ்
புருவமது வில்லொத்தாள் - தீயில்
சுட்டெடுத்த தங்கமதில்
தோய்ந்தெடுத்த தேகத்தாள்! - அட!
கட்டழகி கன்னியவள்
காதலன் நான் இல்லையே!
மெட்டுவரும் பாட்டிசைக்க
மெல்லியவள் வாய்மொழிந்தாள் - வான்
கொட்டுமழைக் கார்மேகக்
குளிர்வண்ணக் கூந்தலினாள்! - கை
தட்டவரும் தாளம் அவள்
தளிர்மேனி நடைபயின்றாள் - அட!
கட்டழகு கன்னியவள்
காதலன் நான் இல்லையே!
தொட்டணைக்கத் தூண்டுமொரு
துடிக்குஇளம் பருவத்தாள்! - ஆசை
விட்டவராம் முனிவரெல்லாம்
விழைந்திடுமோர் எழில்பெற்றாள் - தினம்
தட்டிதட்டிச் சிற்பிஅவன்
தந்ததொரு உருவத்தாள்!
கட்டழகு கன்னியவள்
காதலன் நான் இல்லையே!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|