|
கருநிறமே ஆனாலும் களைவிளங்கும் முகம்வேண்டும்!
உருவினிலே சிலைபோன்ற உடல்கட்டு வேண்டு! தமிழ்த்
திருக்குறளின் நெறிநின்று செந்தமிழைப் போற்றிவரும்
ஒருதமிழ்ப்பெண் வேண்டும் அவள் உத்தமியாய் வேண்டுமே!
இடைவரைக்கும் நீண்டிருக்கும் எழில்கூந்தல் வேண்டும்! தமிழ்
உடையணிந்து பண்பாட்டின் உன்னதம்காத் திடவேண்டும்
நடைபயில இடையசைந்து நடம்புரிய வேண்டும்! அவள்
கடைவிழிப் பார்வையிலே நான் காதல்சுகம் பெறவேண்டும்
புதுமையிலே நல்லவற்றைப் போற்றிடவும் பழமையிலே
ஒதுக்குவன ஒதுக்கிடவும் உலகத்தின் நிலையறிந்து
பொதுஅறிவும் நற்பண்பும் பொருந்திய பெண்வேண்டும் அவள்!
பதுமையெனும் நலங்கொண்ட பத்தினியாய் வேண்டுமே!
காலையிலே கண்விழித்துக் கடன்யாவும் முடித்துவிட்டுக்
கோலமிட்கு வாசலிலே குலதெய்வம் கும்பிட்டு
வேலையிலே ஈடுபட்டு வீடிலங்கச் செய்யும் அந்த
நீலக்குயில் அன்பிலே நிறைந்தவளாய் வேண்டுமே!
சிக்கனத்தைக் கடைபிடித்துத் தேவைகளை நன்கறிந்து
தக்கபடி செலவுசெய்து தன்மானம் காக்கின்ற
முக்கனியின் சுவைமொழியாள் முத்தமிழ்ப்பெண் வேண்டும்! அவள்
எக்குறையும் இல்லாத இனியவளாய் வேண்டுமே!
கணவன்தனக்(கு) இன்பந்தரக் கலைகள்பல அறிந்தவளாய்
அணங்குகளுக்கு ஏற்றந்தரும் அச்சம்நாண் மடம்பயிர்ப்பும்
இணங்கப்பெற்ற திருமகளாய் என்இதயம் போற்றுமொரு
குணவதியாய் வேண்டும்! அவள் குலமகளாய் வேண்டுமே!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|