|
இருதய துடிப்பி னுக்கும்
இடைவெளி உண்டு கண்டீர்!
ஒருஇடை வெளியே இன்றி
உம்மையே நினைத்து நாளும்
உருகினேன்! அன்பரே என்
உயிரிலே கலந்து விட்டீர்!
வரும்பொழு தெல்லாம் வாடி
வதங்கும்பூங் கொடி யாவேனோ?
பொன்பொருள் ஆசை யற்றுப்
பொய்யிலாக் காதல் கொண்டு
என்புடன் சேர்ந்த ஊன்போல்
இருவரும் உறவு கொண்டோம்!
அன்பினால் இணைந்த நம்மை
அருகதை யற்ற இந்த
மன்பதை பிரித்த போதும்
வாசம்போ மோ நம் காதல்?
சாதியைப் பிரித்துக் காட்டித்
தடைபல போடு மிந்த -
நீதியை மறந்து வாழும்
நீசரின் உலகை விட்டுக்
காதலை ஆதரிக்கும்
கண்ணியர் உறவை நாடி
வேதனை யின்றி வாழ்வோம்!
விரைந்தெனை அழைக்க வாரீர்!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|