|
வஞ்ச மின்றி அன்பைக் காட்டி - என்
மனத்திலே ஆசையினை மூட்டி- ஒரு
சஞ்சலப் பேயென ஆட்டி - என்னைத்
தவித்திடச் செய்வதோ கண்ணாட்டி?
பொன்னையும் பொருளையும் வெறுத்தேன்! - அடி!
பூங்கொடி உன்னினைவை நிறுத்தேன்! - உன்னால்
என்னுடல் இளைத்துருகிச் சிறுத்தேன்! - என்னை
ஏங்கச்செய் தாய் எனினும் பொறுத்தேன்!
தினமும் உன்னினைவின் தொல்லை! - அதைச்
செப்பவோ வார்த்தைகள் இல்லை! - என்
கனவிலும் சிந்துகின்றாய் முல்லை! - காதல்
கற்பனைக்(கு)
ஏதடி எல்லை?
உலகமே பொய்யென்று கண்டேன்! - என்
உறவெல்லாம் நீயெனக் கொண்டேன்! - அட!
குலமகள் உன் அன்பில் கட்டுண்டேன்! - இனிஓர்
கோதையைக் கனவிலும் அண்டேன்!
அனல்விடும் மூச்சு வாங்கி! - இங்கு
அனுதினம் தவிக்கிறேன் ஏங்கி! - பெண்ணே
மனத்திலே ஆசை வளருதடி ஓங்கி! - என்னை
வாழ்த்தடி உன்மடியில் தாங்கி!
காணும் அழகெல்லாம் உன் மாட்சி! - என்
கற்பனை தன்னிலும் உன் ஆட்சி - நான்
பேணிடும் பொருளெல்லாம் உன் காட்சி! - என்
பேதைமைக்கு என்றுதான் மீட்சி?
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|