|
ஈழத்தையும் ஈழ மக்களையும்
இல்லாமல் செய்யவே
இலங்கை அரசு
திட்டமிட்டுள்ளது!
அது,
அமைதிப் பேச்சு ஆவணத்தை
நூல்கட்டி
பட்டம்விட்டுள்ளது!
இலங்கையில் நடக்கும்
கலவரங்கள் உண்மை நிலவரங்கள்
உலக ஊடகங்களால்
ஏனோ மறுதலிக்கப்படுகிறது?
இலங்கை அரசின் நாடகங்களே
ஒளிபரப்பப்படுகிறது!
மனிதநேயம் பேசும்
மாமேதைகளே!
மனுக்குலத்தைக் காக்கின்ற
கருணா மூர்த்திகளே!!
இலங்கை அரசு நடத்தும்
இனப் படுகொலைகள்
உங்கள் கண்களுக்குப்
படவில்லையா?
நெஞ்சைத்
தொடவில்லையா?
"சாவது தமிழன் தானே,
நமக்கு ஆவது என்ன?"
எனும் அலட்சியமா?
அல்லது,
மதச்சார்புடையோர்க்கும்
இனச்சார்புடையோர்க்கும்
மனமிரங்குவதுதான்
உங்களது இலட்சியமா?
பூமிப் பந்தில் எந்த மூலையில்
(இலங்கையைத் தவிர)
மக்களுக்கு உயிர்ச்சேதம்
ஏற்பட்டுவிட்டால் - வாழ்வு
பாழ்பட்டுவிட்டால்
உலகத் தலைவர்களிடமிருந்து
கருணைக் குரல்கள்
அழுகின்றன!
அதுவே,
தமிழருக்கு இன்னலென்றால்
உலகத்தின் குரல்கள்
ஆழக்கிணற்றிலிருந்து
எழுகின்றன!
பின்பு மெல்ல மெல்ல
நழுவுகின்றன!
முடிவில் கைகழுவுகின்றன!
தமிழரென்றால்,
மனிதராகத் தோன்றவில்லையா?
இயற்கையின் ஐம்பூதங்களும்
தமிழரைத் தீண்டவில்லையா?
தமிழருக்கும் அன்பு, பாசம், ஆசை, நேசம்,
இன்பம், துன்பம், குடும்பம், உறவு,
மொழி, கலை, பண்பாடு, சமயம்,
தன்மானம், வீரம், உரிமை...
எல்லாம் அவருயிரோடு
கலந்திருப்பவை என்பதைக்
கண்டதில்லையா?
உலக மக்கள் யாரும்
இவையெல்லாம்
கொண்டதில்லையா?
மதம், மொழி, இனம், நிறம், தேசம்
இவையெல்லாம் கடந்த
மனம் பரந்த
மாமனிதரே மனிதநேயம் காக்கும்
குழுவிற்குத் தலைமை ஏற்கவேண்டும்!
இவ்வரிய தகுதிகள் இல்லாதவர்
இதைவிட்டு வேறு வேலை
பார்க்கவேண்டும்!
அதுவே,
இப்பூமிக்கும்
மனித குலத்திற்கும்
நன்மை உண்டாக்கும்!
இன்றேல்,
பாரபட்சம் காட்டும்
இம்மனித நேயக் குழு
பூமியை இரண்டாக்கும்!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|