|
தமிழைச் சரியாக
உச்சரிக்கத் தெரியாத பேரெல்லாம்
யார் யாரெல்லாம்
இன்று
தமிழ்க்கவிதை வாசிக்கின்றார்!
தமிழின் தன்மையை அறியாமல்
இவர்,
தமிழை நேசிக்கின்றார்!
ஆனபோதும்,
இவர்தம் தமிழ்ப்பற்றைப்
பாராட்டத்தான் வேண்டும்!
அதே வேளை
இவர்களுக்கு,
ஒளவை மூதாட்டியின் அமுத வாக்கை
நினைவூட்டத்தான் வேண்டும்!
"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்"
என்பதற்கொப்ப,
தமிழின் அடிப்படையான
வல்லினம்: க, ச,
ட, த, ப, ற
மெல்லினம்: ங, ஞ, ண, ந, ம, ன
இடையினம்: ய, ர, ல, வ, ழ, ள
எனவரும்,
தமிழ் எழுத்தொலிகள் வேற்றுமையில்
நாப்பழக்கம் உள்ளவர் வாசிக்கும் கவிதையில்
தமிழமுதம் ஊறும்!
இது
அனுபவம் கூறும்!
தமிழறிந்தவர் வாசிக்கும்
தமிழ்க்கவிதை கேட்டு
மனம் இன்புறுகிறது!
தமிழறியாதவர் வாசிக்கும்
தரமிக்க கவிதையெனினும்
கேட்டு மனம் துன்புறுகிறது!
சித்திரத்தில் கைப்பழக்கம் இல்லாதவர்
செய்கின்ற ஓவியம் கண்டு
கண்கள் வியக்குமா?
செந்தமிழில் நாப்பழக்கம் இல்லாதவர்
செவிகேட்க வாசிக்கும் கவிதை
இன்பம் பயக்குமா?
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|