|
என்ன சொன்னாய்...?
நீ... சாதியா?
ஓ...!
நீ அந்தத் தீவிரவாதியா?
ஆரியர் என்னும் பூரியர்
நம்மில்மூட்டிய தீ!
இன்னும்
எரிந்துகொண்டிருக்கிறது!
நம் இனத்தை மறைமுகமாக
அரிந்துகொண்டிருக்கிறது!
ஐந்தறிவு விலங்கினம்
நாய்களுக்கு இருக்கலாம்
சாதி!
ஆறறிவு மனிதருக்கு இருக்கலாமோ
இந்த
வேண்டாத நீதி?
நமக்குள்ளே பிரிவினையை வளர்க்கும்
சாதிச் சங்கங்களை மூடு!
தமிழனின் ஒற்றுமைக்கு
அதனால் வருமே
கேடு!
ஒரே மண்ணில் பிறந்தோம்!
ஒரே மண்ணில் ஓடி ஆடி விளையாடினோம்!
ஒரே வானக் கூரையில் வாழ்ந்தோம்!
ஒரே மொழியே பேசினோம்!
ஒரே பண்பாட்டையே கடைபிடித்தோம்!
ஒரே காற்றையே மூச்சிழுத்தோம்!
ஒரே மன்பதையாகவும் ஒரே இனமாகவும் வாழ்ந்தோம்!
ஊறுசெய்யும் சாதி நோய்க்கு ஏன்
இடம் தந்தோம்?
சாதி...
உள்ளம் தெளிந்தவர் நெஞ்சில்
ஒளிகண்ட இருள்போல
ஓடி மறைந்து போகிறது!
சாதி...
அன்பில் நெகிழ்ந்தவர் நெஞ்சில்
அனல்பட்ட மெழுகாக
அடையாளம் அற்றுப் போகிறது!
சாதி...
நீதிவழி நிற்பவர் நெஞ்சில்
நீர்கலந்த உப்பாக
நிலைகெட்டுப் போகிறது!
சாதி...
காதலில் வீழ்ந்து
கசிந்தவர் நெஞ்சில்
பரிதிமுன் பனிபோல்
பறந்து போகிறது!
சாதி...
அருள்கொண்ட ஞானியர் நெஞ்சில்
அறிவின்முன் அறியாமைபோல்
அழிந்தொழிந்து போகிறது!
சாதி...
கருணை பொங்கும் நல்லவர் நெஞ்சில்
காற்றில் கலந்த புகைபோலக்
கண்மறைந்து போகிறது!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|