|
செந்தமிழ் நாட்டிலிருந்து
இந்த நாட்டில் ஒளியேறும் - சில
தமிழ்த்தொடர் நாடகங்களின்
தரம்பற்றிக் கேளிரோ!
தொடக்கி வைக்கவும் பாட்டு!
முடித்து வைக்கவும் பாட்டு!
குடும்பச் சண்டை வரலாறும்!
கூட்டுக் குடும்பத் தகராறும்!
புளித்துப் போன காதலும்!
அலுத்துப் போன மோதலும்!
இயற்கைக்கு மாறான தோரணையும்!
செயற்கையான அங்க பாவனையும்!
ஐயர் வீட்டுப் பேச்சும்!
ஆங்கிலம் கலந்த வீச்சும்!
அறிவுக் கொவ்வாத காட்சியும்!
அழுது புலம்பும் மாட்சியும்!
உருட்டும் விழி பாவங்களும்!
உலுத்துப் போன சோகங்களும்!
வசையெனத் தடதடக்கும்
இசைப் பின்னனி அறுவைகளும்!
இயல்பாக இல்லாத வசனங்களும்!
எடுத்ததெற்கெல்லாம் முக விசனங்களும்!
கலந்ததொரு கலவையாய்க்
காசுக்காய் இயக்கப்படும்!
தரமதைத் தள்ளிவைத்த
தமிழ்த்தொடர் நாடகங்கள்!
ஆனாலும்,
சிற்சில நாடகங்கள்
சிறப்புடன் விளங்குகின்றன!
நாடகத் தொடக்கத்தில் வேண்டாம் பாட்டு!
நாடக முடிவிலும் வேண்டாம் பாட்டு!
நடைமுறை உலகியல்படி
நாடகம் இருக்க வேண்டும்!
துல்லியமான இசையும்
துடிப்பான நடிப்பும்
சேர்ந்திருந்தால் மேலும்
சிறந்து விளங்குமன்றோ?
மேனாட்டார் இயக்கிவரும்
மெக்சிக்கோ (Mexico) நாடகங்களைப்
நாட்டமுடன் பார்த்துவந்தால்
நாடகத்தின் தரம்தெரியும்!
நடிப்பில் ஒரு விறுவிறுப்பும்!
நடையில் ஒரு சுறுசுறுப்பும்!
இயல்பான நடிப்பாற்றலும்!
வியக்கவைக்கும் காட்சிகளும்
ஆர்வமூட்டும் கதையோட்டமும்!
அமைதியான இசைப்பின்னணியும்!
நயமெல்லாம் ஒருங்கிணைந்து
நவரசமூட்டும் நாடகங்கள்!
நடைமுறையில் நடப்பதுபோல்
நடிப்பதிலே வல்லவர்கள்!
நளினத்திலும் நவரசத்திலும்!
நானிலமே விரும்பும் அந்தப்
பிலிப்பைன் (Philipines) நாட்டவரின்
பேர்சொல்லும் நாடகங்களைப்
பார்த்தால் நம் தமிழ் இயக்குநர்கள்
பக்குவம் பெற ஏதுவாகும்!
உயிரோட்டம் நிறைந்திருக்கும்!
ஒப்பற்ற காட்சிகளை
இயல்பாக இயக்குவதில்
என்றென்றும் வல்லவர்கள்!
தாய்லாந்து (Thailand) நாட்டவரின்
தரம்சொல்லும் நாடகங்கள்
எத்தனையோ உள்ளன! நம்
இயக்குநர்கள் பார்க்கவேண்டும்!
தமிழ்த்தொடர் நாடகங்களின்
தரம் உயர சில வேண்டுகோள்!
ஏற்புடைய வசனங்களும்
இயல்பான அசைவுகளும்
நடிப்பென்று இல்லாமல்
நடைமுறைபோல் இருக்கவேண்டும்!
திகிலூட்டும் கட்டஙகளிலும்
திடுக்கிடும் காட்சிகளிலும்
சன்னமான இசைவேண்டும்!
தடதடக்கும் இசைவேண்டாம்!
ஆங்கிலம் கலந்து பேசும்
அரைவேக்காட்டு வசனம் வேண்டாம்!
தாய்மொழியும் பண்பாடும்!
தரம் உயர்ந்திருக்க வேண்டும்!
அறிவுக்கொவ்வாத காட்சிகளை
அடியோடு நீக்க வேண்டும்!
கருத்தினில் நிலை தாழ்ந்திருக்கும்
கற்பனையில் தினம் வாழ்ந்திருக்கும்
நம்மவரின் சிந்தனையில்
செம்மையினை ஏற்றவேண்டும்!
தமிழ்நாடகம் இயக்கும் இயக்குநர்கள்!
தமிழ் உயர இதைச் செய்வீரோ?
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|