|
"தமிழிலக்கிய வரலாறும்
சந்தேகங்களும்"
எனும் தலைப்பில்
அன்பர் சைபீர் முகமது எழுதியிருந்த
தமிழ்க்கட்டுரை கண்ணுற்றோம்!
அன்பர் சைபீர் முகமது
அருந்தமிழ் இலக்கியங்கள்
அத்தனையும் கற்றுணர்ந்து
அளக்கின்றாரா?
அல்லது
நுனிப்புல் மேய்ந்துவிட்டு
நோட்டம் சொல்கின்றாரா?
அருந்தமிழ் அறிஞர்களே!
ஆய்வாளர்களே! புலவர்களே!
அன்பர் சை. பீர்முகமதுவின்
ஐயத்தைத் தெளிவு செய்க!
சங்க இலக்கியங்களையும்
தமிழ் மன்னர்களையும்
ஆய்வுசெய்து தெளிவுபெறும்
அறிவுதிறன் போதாததால்
வம்பர் பீர்முகமதுவுக்கு
மண்டை வெடிக்கிறதோ?
இருக்கின்ற இவ்வுலக
இலக்கியங்கள் எல்லாமும்
மெய்யும் பொய்யும்
விரவிவருவன என்பதும்
இலக்கியங்களே வரலாற்றை
எடுத்துரைப்பன என்பதும்
எல்லா ஆய்வாளர்களும்
ஏற்றுவந்த உண்மையிது!
ஆக,
எது மெய்? எது பொய்?
எனும் குழப்பம் பீர்முகமதுவுக்கு
ஏன்வந்ததோ?
அருந்தமிழ் இலக்கியத்தின்
அரியதொரு வரலாற்றை
ஆய்ந்தறிந்த தமிழறிஞர்கள்
அறியாத பேருண்மையைப்
பீர்முகமது கண்டவர்போல்
பிதற்றுகின்றார் பித்தரைப்போல்!
தமிழால் பேரும் புகழும்
தராதரம் தகுதியும் பெற்றுத்
தமிழரிடம் மதிப்பும் பெற்ற
சை. பீர்முகமது இன்று
தமிழையும் தமிழரையும்
சந்தேகத்தில்சற்றுக்
கிள்ளிப் பார்க்கின்றாரா?
"சங்கம்" எனும் சொல்
தமிழ்ச்சொல் அல்லவென்றால்
"சை. பீர்முகமது என்பதென்ன தமிழா?
தமிழிலிக்கிய வரலாற்றைத்
தன்மூப்பாய் ஆய்வுசெய்து
தக்க புள்ளிகள் பெறாமல்
சைபர் வாங்கிவிட்டார்
சை. பீர்முகமது பாவம்!
தாத்தாவின் ஓட்டைச் சட்டைக்கும்
சங்கத்தமிழ் இலக்கியத்திற்கும்
ஒப்புமை கண்டு வாதிப்பது
உண்மை தெளிந்தவர்க்கு அழகல்ல!
தாத்தாக்கள் நமக்கென்று
தந்துசென்ற தாய்மொழி!
இலக்கியங்கள்! இலக்கணங்கள்!
கலைக் கருவூலங்கள்!
பழையதென்று தள்ளிவைத்துப்
பதடிகளாய் வாழ்வதற்கு
அறிவுக் குருடர்கள் அல்ல யாம்!
ஆன்றோர்கள் விட்டுச் சென்ற
அருங்களஞ்சியங்கள் அவையன்றோ
அடையாளங்கள் தமிழருக்கு!
சை. பீர்முகமது அவர்கள்
தன் நிலை அறியவேண்டும்!
சங்கத்தமிழ் இலக்கியங்களைத்
தலைமேல் தாங்கிப் போற்றுவதால்
தற்காலப் புத்திலக்கியங்களைத்
தள்ளிவைக்க நினைத்தோமில்லை!
அருந்தமிழ் அடிவேரின்
ஆழத்தை அளந்துள்ளாராம்!
அன்பர் சை. பீர்முகமது
அவருக்குப் பட்டமொன்று
அளிக்கலாம் போலும்!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|