|
ஏதும் அறியாத - ஒரு
சூதும் அறியாத
ஈன்ற செல்வங்களும்
உன்னோடு சேர்ந்து
மண்ணோடு போகவா
பத்துத் திங்கள் சுமந்து
பெற்றெடுத்து - பின்
பாலூட்டிச் சீராட்டி
வளர்த்தெடுத்தாய்
தமிழ்த்தாய்?
எப்படியம்மா மனம் வந்தது?
அப்படி என்னதான் நடந்தது?
உற்றவரிடம் கலந்து
உள்ளம் திறந்து
பேசியிருந்தால்
ஒரு தீர்வு
திண்ணம் பிறந்திருக்கும்!
எண்ணம் திறந்திருக்கும்!
இன்பமும் துன்பமும்
நிரந்தரமில்லை!
இன்பமே வாழ்வாக
யாருக்கும் தெய்வம்
வரந்தரவில்லை!
நம்பிக்கையின் வேர்கள்
பலம் பெற்றிருந்தால்
வீசிடும் துன்பப் புயலை
எதிர்கொள்ளலாம்!
வேர்கள்
பலம் அற்றிருந்தால்
சிறு காற்றும்
நம்மைக் கீழே
தள்ளிவிடும்!
பிஞ்சுகளோடு கொஞ்சிக் குலாவி
மகிழ்ந்திருக்க வேண்டியவள்!
எதற்காக வேண்டி அவள்
இந்தக் கொடிய முடிவெடுத்தாள்?
துன்பங்களையும் துயரங்களையும்
தாண்டி அவள் வந்திருந்தால்
தனக்கும் தன் செல்வங்களுக்கும்
தானே குழி தோண்டியவள்
எனும் அவப்பெயர்
அவளுக்கு வந்திருக்குமா?
நமக்கும்
மனம் நொந்திருக்குமா?
கட்டிய கணவனால்...
மனம் வெந்ததோ?
பஞ்சம் பட்டினியால் இந்நிலை
வந்ததோ?
குழந்தைகளின் எதிர்காலம் எண்ணி
மனம் நொந்ததோ?
பெற்ற செல்வங்ளையும்
உன்னோடு கொண்டுசெல்ல
எப்படித்தான் - மனம்
இடம் தந்ததோ?
இந்தியரைப் பிரதிநிதிக்கும்
தலைவர்களே!
இக்கொடுமைக்கு,
திரைபடமே காரணம் என்று
மேலெழுந்தவாரியாய்ப்
பார்க்கவேண்டாம்! - கதை
கோர்க்கவேண்டாம்!
உண்மை நிலையை
நேரில் கண்டறிந்து
தீர ஆராய்ந்து
உள்ளதைச் சொல்ல வேண்டும்! - அதையும்
பொறுத்துச் சொல்லவேண்டும்
பிறர் நம்மை இகழாதபடி
கருத்துச் சொல்லவேண்டும்!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|