|
பெயரில் வரும் முதல் எழுத்து
இன்ன எழுத்தில் தொடங்கவேண்டும்
இன்ன ஓசையில் ஒலிக்க வேண்டும்
இத்தனை எழுத்துகளில் அடங்கவேண்டும்
என்று பற்பல நிபந்தனைகள்!
பூசாரியின் கணிப்புப்படி
வடமொழியின் திணிப்புப்படி
சோதிடரின் வாக்குப்படி
சமற்கிருத போக்குப்படி
தமிழ் மரபுக்கு ஒவ்வாத
தமிழல்லாத பெயர்களைப்
பிள்ளைகளுக்குச் சூட்டுவதால்
அவர்தம்,
தலையெழுத்தும் தகுதியும் மாறிடுமா?
விதிக்கப்பட்ட விதியைத்தான் மீறிடுமா?
பிள்ளைகளின் நல்வாழ்வும் பெருவாழ்வும்
பெற்றோர்தம் கையிலன்றோ இருக்கிறது!
இடும் பெயர்களிலா இருக்கிறது?
என்றபோதும்,
தமிழர்தம் அடையாளம் காட்டும்
தமிழ்ப்பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டுவது
தமிழர்தம் கடமையாகும்! - அது
நமது உடைமையாகும்!
தமிழர்தம் அடையாளம் காட்டிடவும்!
தனித்தன்மையை நாட்டிடவும்!
இன உணர்வோடும்!
தாய்மொழிப் பற்றோடும்!
வாழ்வதே தமிழர்க்கு அழகாகும் !
இன்றேல்,
தமிழர்க்கு மாபெரும் இழிவாகும்!
குப்பன், சுப்பன், கருப்பன், கடம்பன்,
வெள்ளையப்பன், பச்சையப்பன், நீலக்கருப்பன்
மற்றும்
கருப்பி, சிகப்பி, பேச்சாயி, காத்தாயி,
முத்தம்மா, முனியம்மா, மூக்காயி...
என்பன போன்ற தமிழ்ப்பெயர்களைப்
பிள்ளைகளுக்குச் சூட்டுவது
கேவலமில்லை!
நல்ல தமிழ்ப்பெயர்கள் இவைகளை
விட்டொழிக்கத் தேவையுமில்லை!
நல்ல தமிழ்ப்பெயர்களை
விட்டொழிக்கச் சொல்லும்
தமிழர்தம் உரிமைகளைத்
தப்பாக இட்டுச் செல்லும்
சமுதாயக் காவலர்களே!
நம் முன்னோர்களான பாட்டன், பூட்டன்,
பாட்டி, பூட்டிமார்கள்தம்
நினைவுகளும் அடையாளங்களும்
நாளடைவில் மறைந்துபோகும்!
சமுதாயக் காவலர்களே இதைச் செய்வது
மிகவும் வருத்தமாகும்!
இந்து சங்கங்களும்
மற்றும் பிற இயக்கங்களும்
தர்ஷினி, வைஷினி, ஹோமலா, ஹேமதா,
அவினாஷ், கவினாஷ், காமேஷ், சோமேஷ்,
வைதீஷ், சதீஷ்...
என்பன போன்ற,
தமிழல்லாத பெயர்களை,
தமிழ்மரபை மீறிப் புழங்கிவரும்
பூசாரிகளும் ஜோதிடர்களும்!
வலிய வழங்கிவரும்!
தமிழல்லாத பெயர்களைச் சூடி மகிழும்!
தாய்மொழிப் பற்றில்லாத
இனமானம் சிறிதுமில்லாத
தான்தோன்றித் தமிழருக்கு,
இந்து சங்கங்களும் மற்றும் பிற இயக்கங்களும்
ஆலோசனை கூறியதுண்டா?
எண்ணிலடங்காப் பல வண்ணத் தமிழ்ப்பெயர்கள்
எத்தனையோ இருக்கையிலே
தமிழுக்குப் புறம்பான பெயர்களைச்
சூடுபவர்மேல் சீறியதுண்டா?
வடமொழிப் பெயர்களில்
மோகங்கொண்டு தீராத தாகங்கொண்டு
மதிமயங்கி இருக்கும்!
தமிழ்ப்பெயர் சூட்டுவதில்
மனம் தயங்கி இருக்கும்!
தமிழர்களை மாற்றுவதற்கு
அவர்மனத்தில்
தமிழ்ப்பற்றை ஏற்றுவதற்கு
இந்து சங்கங்களும்
சமூக இயக்கங்களும்
மற்றும் பிற மன்றங்களும்
இதுவரையில் செய்ததென்ன?
ஓ! செய்தன! செய்தன!
நல்ல தமிழ்ப்பெயர்களைக்
கழிக்கச் சொல்லி,
பரிந்துரை செய்தன!
அது,
தமக்குரிய உரிமையைத்
தாமே கொய்தன!
மற்றும்,
தமிழர் நெஞ்சில்
அம்புகளை எய்தன!
மேலும் தம் முன்னோர்களைத்
தாமே வைதன!
தமிழர்கள்,
பிள்ளை பிறந்த மறுகணமே
தாம்பெற்ற செல்வங்கட்குப்
பெயர் சூட்டக்
கோயில் பூசாரிகளையும்!
ஜோதிட ஆசாரிகளையும்!
தேடி ஓடும் வழக்கத்தைத்
தடுக்கவும் வேண்டா!
தமிழல்லாத பெயர்களுக்கு ஆதரவு
கொடுக்கவும் வேண்டா!
ஆனால்...!
கோயில் பூசாரிகளையும்!
சோதிட ஆசாரிகளையும்
பெயருக்காக நாடி வருபவரிடம்
தமிழ் எதுவென்றறியாதும்
ஓடி வருபவரிடம்,
முதலெழுத்துமுதல் முடிவெழுத்துவரை
தமிழெழுத்தே விரவிவரும்
முழுத் தமிழ்ப்பெயரே வரும்படி
காதுக்கு இனிமை தரும்படி
கணித்துத் தரவேண்டும்!
தமிழைத் திணித்துத் தரவேண்டும்!
இந்து சங்கங்களும் மற்றும் பிற இயக்கங்களும்
இந்தக் கோரிக்கையைப்
கோயில் பூசாரிகட்கும்!
சோதிட ஆசாரிகட்கும்
விடுக்க வேண்டும்!
அல்ல! அல்ல!
ஆணையிட வேண்டும்!
தமிழுக்காக! நாளைய தலைமுறைக்காக
நாம் இந்தத்
தூணையிட வேண்டும்!
அது நம் தலைமுறைக்குத்
தமிழ்மீதன்பையும்! நம்பிக்கையும்! உறுதியும்
கொடுக்கவேண்டும்!
மற்றபடி,
பூசாரிகளையும் சோதிடர்களையும்
நாடாத தேடி ஓடாத தமிழர்
தம் விருப்பப்படியே
அவர்தம்,
பொறுப்புப்படியே!
தாம் பெற்ற செல்வங்களுக்குத்
தாமே நல்லதமிழ்ப் பெயர்களைச் சூட்ட
ஊக்கமளிக்கவேண்டும்!
அது
வருங்காலத் தலைமுறைக்கும்
நமதாருயிர் தமிழுக்கும்
ஆக்கமளிக்கவேண்டும்!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|