|
அண்ணி கொழுந்தன் மேல்
ஆசைபடுகிறாளாம்!
கொழுந்தியாள் அக்காள் கணவன்மேல்
காதல் கொள்கிறாளாம்!
என்னையா கதை இது?
அறிஞர் குழாமிடம்
பொன்னையா பெரும் இது?
உறவுகளை இழிவுசெய்யும் - தமிழ்த்
திரைகதையின் சிதைவிது! - உயர்
பண்பாட்டைச் சீரழிக்கும் சதி இது!
புதுமை செய்வதாய் எண்ணி - சில
புல்லுருவிகள் புகுத்துகின்ற விதியிது!
இயக்குநர்...
அண்ணி என்பவள் கொழுந்தன் மேல்
ஆசைகொள்வது எப்படியெனப்
போதிக்கின்றாரா?
நடைமுறையில்...
இயக்குநரின் தம்பியின் மேல்
தம் மனைவி
ஆசைகொள்வதை
ஆமோதிக்கின்றாரா?
இயக்குநர்...
தங்கை என்பவள் தம்
அக்காள் கணவன் மேல்
காதல்கொள்ளும் நூதனத்தை
விவரிக்கின்றாரா?
நடைமுறையில்...
இயக்குநரின் தங்கை
வேறொருத்தியின் கணவன் மேல்
காதல் இச்சை கொள்வது
சரி என்கின்றாரா?
கண்டதே காட்சி கொண்டதே கோலம்
எனவாழும் நம்மவர்க்கு
இதுபோன்ற கதைகள்
மதுபோதை விளைவிக்கும் தீமைக்கு
ஒப்பாகும்!
இயக்குநர்தம் கண்ணோட்டம்
தப்பாகும்!
திரைபடங்கள்
பல்சுவை உணவு சமைத்துச்
சுவைக்கத் தருவதுபோல்
இருக்கக் கூடாது! - அது
சவைத்த பின்பு
யாருக்கும் பயன்படாது!
இயல்பாகவும் எழுச்சி தருவதாகவும்!
அறிவை வளர்ப்பதாகவும்!
விழிப்படையச் செய்வதாகவும்!
நல்லறிஞர் கூட்டம்
பாராட்டும்படியாகவும்! மற்ற இனத்தார் போற்றும் படியாகவும்!
தமிழ்ப்படம் இருக்கவேண்டும்!
இருள்சேர்ந்த நெஞ்சில் - ஒளி
பெருக்க வேண்டும்!
நடைமுறைக் கொவ்வாத - காமக்
களியாட்டங்களும் பாட்டங்களும்
இருபது குண்டர்களை
ஒருவன் புடைப்பது போன்ற
சிறுபிள்ளைத் தனமான
காட்சிகளை விட்டொழிக்க வேண்டும்!
கண்டு களிக்கும் இளையோரை - இவை
கெட்டழிக்கவே தூண்டும்!
காதல், மோதல், காம ஆட்டம், பாட்டம்,
பண்பாட்டுக்கு ஒவ்வாத வசனங்கள்!
மரபை மீறும் உறவு முறைகள்!
என்பதே தமிழ்த்திரைப் படங்கள் - எனும்
தற்கால முறைமைகள் மாறவேண்டும்!
பொற்காலம் மீண்டும் வரவேண்டும்!
நம்தமிழ் இயக்குநர்தம்
மனம்விரிய வேண்டும்! இனம்புரியவேண்டும்!
மேனாட்டவர்தம் திரையனுபவங்களைப்
பெறவேண்டும் - நல்ல
திறம் வேண்டும்!
அவர்தம் தொழில்நுட்பங்களை
அறிய வேண்டும் - அதற்கு
நிறையவே உழைப்பு வேண்டும்!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|