|
ஊருக்கு ஊர்,
எத்தனை எத்தனை கோயில்கள்!
எத்தனை எத்தனை அவதாரங்கள்!
பட்டியலிட்டால்...
ஏடு கொள்ளாது!
கட்டிய கோயில்கள்...
சில செல்லாது!
வழிபாடு செய்ய
கோயில் தலம் இருந்தால் மட்டும் போதுமா?
மழைக்கும் வெயிலுக்கும்
ஒண்டுவதற்கு ஒரு மண்டபம் வேண்டாமா?
கோயிலோடு மண்டபம் இல்லாத ஊரில்
குடியிருக்க வேண்டாம்!
நம்மைப் பிரதிநிதிக்கும்
பிரதிநிதிகளும்
பணம் படைத்த
பெருஞ்செல்வர்களும்
இங்கிருக்கின்றார்!
பல்நோக்கு மண்டபத்தின்
பயனறிந்த - அதன்
நலனறிந்த
பிரதிநிதிகளும் பெருஞ்செல்வர்களும்
எங்கிருக்கின்றார்?
அந்நிய இனத்தவர்க்கு
ஊருக்கு ஊர்...
ஒன்றுக்கும் மேலாக...
என இங்கு இருக்கின்றனவாம்!!
அவை வருமானமும்
கொடுக்கின்றனவாம்!
இலட்சம் இலட்சமாய்க்
கோயிலுக்கே
அள்ளியள்ளிக் கொடுக்கின்றார்!
நமக்கென ஒரு பொது மண்டபம்
வேண்டுமென யார் முயற்சி எடுக்கின்றார்?
திருமண வைபவங்களுக்கும்
கலை நிகழ்வுகளுக்கும்
அந்நியர் மண்டபத்தையே
நாடுகின்றார்! - தேடி
ஓடுகின்றார்!
நம்மவரின்,
திருமணங்களும் விருந்து வைபவங்களும்
கலை நிகழ்வுகளும்
அந்நியர் மண்டபத்தையே
நம்பியிருக்கின்றன!
இதை எண்ணி எண்ணி
என்போன்றோரின் மனம்
வெம்பியிருக்கின்றன!
கோயிலுக்குக் கொட்டும்
கோடி கோடி பணத்தை...
ஊருக்கு ஒரு மண்டபம் என்று
திட்டமிட்டிருந்தால்
வருமானம் வந்திருக்கும்! - தமிழர்தம்
திருமணமும் பல நடந்திருக்கும்!
நாட்டில் நமது சொத்துடைமையும்
உயர்ந்திருக்கும்!
கோயில்கள்
கூடாதென்று சொல்ல
யான் ஒரு
நாத்திகன் அல்ல!
இருக்கின்ற கோயில்களே
போதும் என்கின்றேன்!
இனி,
நமக்கு வேண்டுவதெல்லாம்
மண்டபம்! மண்டபம்! மண்டபம்!
பல்நோக்கு மண்டபம்!
ஊருக்கொரு மண்டபம்
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|