|
அண்டையில் அந்த இலங்கையில்
அகதி முகாம்களில் அகப்பட்ட மான்களாய்!
சகதித் தடாகங்களில் தத்தளிக்கும் மீன்களாய்!
அடைபட்டு அல்லலுறும் அற்ப ஆவிகளாய்!
அந்தோ! ஈழத்து மக்கள்
அங்கே திண்டாட்டம்!
செம்மொழி மாநாடு ஏற்பாடுகள்!
தெருவெங்கும் பண்பாட்டு ஊர்வலங்கள்!
சீர்விளங்கும் திருவிழாக் கோலங்கள்!
செந்தமிழ் வரலாற்று அரங்கங்கள்!
திரண்டு கூடும் தமிழர்களுக்கு
இங்கே கொண்டாட்டம்!
செம்மொழி மாநாடு இப்போது தேவையா?
சிற்சிலர் அல்ல பற்பலர் கேட்கும் கேள்வி இது!
நற்றமிழ் ஓசை உலகெங்கும் ஒலிக்க
நற்பணி செய்த ஈழத்து உறவுகள் அங்கே
நரகத்தில் நலிந்திருக்கும் போது
நமக்கிங்கே மகிழ்ச்சி என்பதேது?
புனர்வாழ்வு காணாது தவித்திடும் மக்கள்!
பொய்மைச் சிங்களனால் எத்தனை சிக்கல்!
புத்தரைப் போற்றும் புனிதர்களாய்க் காட்டி
போலிச் சிங்களத்தை நாட்டி
பூவுலகத் தோரை ஏய்க்கின்றான்!
புலிகளென்று தமிழ்மக்களை மாய்க்கின்றான்!
தமிழுக்குச் செந்தமிழுக்கு விழாவென்றால்
தன்மானத் தமிழர் அதை வெறுப்பாரோ?
தடை விதித்துத்தான் மறுப்பாரோ?
தருணம் இதுவல்ல என்பதே கருத்து!
தாளாத் துயரில் தமிழன் அங்கே!
வாளாவிருப்பதோ நாமிங்கே?
மாநாட்டில் எடுக்கவேண்டும் முடிவு!
வாடும் தமிழனுக்கு வேண்டும் விடிவு!
வையத்தில் பரந்து வாழும் தமிழனுக்கு
மற்றவரால் துன்பம் நேர்ந்தால்
வாய்மூடி வெறுமென இருக்கலாமோ?
தாய்மொழி உறவுகளை மறக்கலாமோ?
மற்றைய தென்மொழிக்கெல்லாம் தமிழே
பெற்ற தாயென்று கால்டுவெல் நாட்டினார்!
நற்றமிழ் அறிஞர் பரிதிமாற்கலைஞர்
நம்மொழி செம்மொழி என்றன்றே காட்டினார்!
எம்மொழிக்கும் உற்ற தாய் நந்தமிழே
என்றெடுத்துப் பாவாணர் சாற்றினார்!
களங்கம் போக்கவே கண்டதிந்த மாநாடு!
விளங்க வில்லையோ கலைஞரின் ஏற்பாடு!
இன்னபிற பேசி இழித்துரைக்கின்றார்!
என்ன பிறர் பேசினும் இறும்பூதெய்துகின்றார்!
கன்னித்தமிழை அரியணை ஏற்றி
கனவை நனவாக்கிய கலைஞரே போற்றி!
தண்டமிழ் மாண்பையும் தன்மையும் கண்டு
தலை வணங்காதவர் யாவரே உண்டு?
அண்ட சராசரமும் அளந்திடும் செந்தமிழ்!
ஆரிய சதியினால் ஆழியுமோ நந்தமிழ்?
கண்டவர் விளம்பலாம் விண்டவர் காணலாம்!
கண்கண்ட கடவுளாய்க் கன்னித்தமிழ் பேணலாம்!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|