|
கரந்த பாலில் நஞ்சைக் கலப்பதுபோல்
கிரந்த எழுத்துகளைத் தமிழ் நெடுங்கணக்கில்
இணைக்கத் திட்டமா?
ஈதென்ன தமிழுக்குச்
சோதனக் கட்டமா?
தேய்ந்துவரும் தமிழைச் சீர்செய்யத்
திட்டங்கள் தீட்டுவார் யாருமில்லை! தமிழ்
அடையாளம் அற்றுப்போகவே
அரும்பணிகள் ஆற்றுகின்றார் தம்
அன்னையையே தூற்றுகின்றார்!
வேண்டாதவன் செய்யவில்லை - இந்த
வேலையற்ற வேலையை - அந்தோ!
வேண்டியவன் தமிழனே - இதைச்
செய்யத் துணிந்தானே! தமிழ்
சீர்கெடப் பணிந்தானே!
தமிழில் இல்லாத (சொற்களை) ஒலிகளைத்
தமிழ் கடன்பெறுவதொன்றும் புதிதல்ல - அவை
திசைச்சொல் (வடசொல்) சொல்லெனவே கொள்ளப்படும்
செந்தமிழ் நெடுங்கணக்கில்
சேர்க்க எண்ணுவது தள்ளப்படும்!
தமிழ் அல்லாத வடமொழி சொற்களைத்
தமிழ் வரிவடிவம் தந்துவிட்டால் - அது
தமிழென்று ஆகுமோ? இந்தத்
தன்மானம் கெட்ட தமிழனின்
தாழ்ந்த புத்தி என்று போகுமோ?
ஸ, ஷ, ஹ, ஜ, ஸ்ரீ போன்ற வரிவடிவங்களைத் தமிழர்கள்
தமிழ் வரிவடிவங்களைக் கொண்டு அமைத்தவை
தமிழில் பிறசொற்கள் நுழைந்ததால்
தமிழுக்கு இவ்வொலிகள்
தேவைபட்டன - எனினும்
தமிழ் நெடுங்கணக்கில் இவை
தள்ளப்பட்டன!
வழக்கிழந்த ஒரு மொழிக்கு வாழ்ளிக்க
வரிந்துகட்டி நிற்கின்றான் நம்தமிழன் - தம்
தம் தாய்மொழி தேய்ந்து வருவது
பற்றிச் சற்றேனும் வருந்தவில்லை!
இன்னும் தமிழன் திருந்தவில்லை!
தமிழுக்கே இலக்கணம் வகுத்த
சான்றோர்கள் அறியாததையா - இந்தத்
தான்தோன்றித் தம்பிரான்கள் அறிந்துவிட்டார்கள்!
தமிழென்ன இவர்களின் சொத்தா? இவர்கள்
தலைக்கேறியது என்ன பித்தா?
இருக்கின்ற எழுத்துக்களே போதுமய்யா! - புது
இலக்கணம் வகுக்க நினைப்பது - தமிழ்
அடித்தளத்தை அசைப்பதற்கு ஒப்பாகும்
அதுவும்,
அன்னை மொழிக்குரியவர்கள் - இதை
அறிந்து செய்வது மிகவும் தப்பாகும்!
வண்ணத் தமிழ்ப்பெயர்கள் சூடிடவும்;
மழலைகளைத் தமிழ்ப்பள்ளி அனுப்பிடவும்
சமயவழி தமிழைப் புழங்கிடவும்
தமிழ்த்துறை அறிஞர்கள் முயலவில்லை!
இவர்கள்
தன்மானத் தமிழர்கள் தானா என
ஏற்க இயலவில்லை!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|