|
தறிகெட்டுத் தடுமாறித்
தடமாறிய மானிடர்க்கு
இறையுணர்வை ஏற்படுத்தி
இம்மையில் நெறியோடும்
தர்மத்தோடும் வாழவே
சமயங்கள் தோன்றின!
மானிட வர்க்கத்தில்
மதத் தீவிரவாதமும்
மனிதநேய மீறல்களும்
இழிந்த மனப்போக்குகளும்
எப்படிக் காலூன்றின?
சமயத்தில் மேலென்றும்
தாழ்வென்றும் பேதமில்லை!
இருக்கின்ற சமயங்களெல்லாம்
இறையுணர்வையே போதிக்கின்றன!
சில கூட்டங்கள் - இன்னும்
தெளிவில்லாமல் ஏன்
வாதிக்கின்றன?
மற்றவரின் சமயங்களை
மதிக்கும் உயர் மனப்பக்குவமும்
மனிதர்க்குரிய மனிதாபிமானமும்
மதபோதகர்கள் பெற்றிருக்க வேண்டும்!
மனிதநேயமே வாழ்வின் பயனென்னும்
வாழ்கைக் கலையைக் கற்றிருக்கவேண்டும்!
சமய பேதத்தைச்
சற்றுத் தள்ளிவைத்து
மனிதாபிமானத்தோடு
மனந்திறந்து பழகினால்
ஆண்டவன் நம்மேல்
அருவருப்புக் கொள்ளமாட்டான்!
அன்பின் வடிவமான
அவன் இதைத் தள்ளமாட்டான்!
தம் மதத்திற்கு இழுக்கு நேர்கையில்
சஞ்சலமும் சினமும் அடைபவர்கள்!
மற்றவர்க்கும் இதே நிலையென்ற
மனப்பக்குவம் அடையவேண்டும்!
மதங்களே மனிதனின்
வாழ்வின் எல்லையென்ற
மூட நம்பிக்கையின்
முட்டுக்கல் உடையவேண்டும்!
மதங்களால் வேறுபட்டவர்கள்
வாழ்த்துப் பரிமாறிக்கொள்வது
பாவமிக்கச் செயலென்ற கருத்தைப்
படிக்காத பாமரரும் - இது
கிறுக்குத் தனச் செயலென்று
கிண்டல் செய்து சிரிப்பார்கள்!
கற்றறிந்த மேதைகள் - இந்தக்
கண்மூடித் தனமான
கருத்துக்குத் தம் நெஞ்சம்
கனன்று பொரிப்பார்கள்!
பல்லினம் வாழுமிந்தப்
பச்சைப் பசும் திருநாட்டில்
மதங்களின் பேராலே
மனிதநேயத்தைச் சிதைக்கலாமா?
நல்லிணக்கத்தைப் பேணிவரும்
நல்லவரின் சிந்தனையில்
நஞ்சையள்ளித் தூவி
நாசத்தை விதைக்கலாமா?
சமயக் காவலர்கள்
தாம் போற்றிவரும்
சமய நெறிகளிலும் கருத்தினிலும்
தக்க தெளிவு பெறவேண்டும்!
முடைநாற்றச் சிந்தனையால்
முரண்பாடுகளை விதைக்கும்
முறைகெட்ட போக்கது
முற்றிலும் அறவேண்டும்!
ஒருமதத்துக்கு உரியவரின்
உதிரமே ஒருவருக்கு
உட்செலுத்த வேண்டுமென்ற
ஒருவழக்கம் இருக்கின்றதா?
மனிதரெல்லாம் ஒன்றென்னும்
மகத்துவம் ஈதறியாமல்
மதத் தீவிரவாதத்தால்
மனிதருக்குள் விரிசலுண்டாக்கும்
மதியிலிகளையும் விதியென்று
மண்மாதா பொறுக்கின்றதா?
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|