|
ஐயகோ!
நெஞ்சம் பதறுகிறது!
நினைத்தாலே உதறுகிறது!
என்ன கொடுமை இது?
இக்கொடுமை இழைத்தவர்க்கு
இதயம் இல்லையோ?!
இங்குப் பிழைக்க வந்த
எம்மவர்க்கு ஏன் இந்தத்
தொல்லையோ?
இக்கொடுமை புரிந்தவரைப்
புடைத்தெடுக்க நெஞ்சம் துடிக்கிறது!
கொடுமைக்கு ஆளானவனைக்
கண்டு மனம்
கண்ணீர் வடிக்கிறது!
பிழைப்புக்கு வந்ததமிழ்
நாட்டவர்க்கு உதையும் சூடும்தான்
கூலியோ?
நீதியும் தர்மமும்
என்ன காலியோ?
உழைப்பவர்க்கு ஏற்ற
ஊதியம் தாராமல்
ஊறுசெய்த உலுத்தரைப்
பாரபட்சமின்றி தண்டிக்க வேண்டும்!
இக்கொடுமை கண்டு,
வாளாவிருந்தவரைக்
கண்டிக்க வேண்டும்!
திரைகடல் ஓடி
திரவியம் தேட வந்த
தென்தமிழ் நாட்டவரை...
சிறையிட வைத்துச்
சித்திரவதை செய்தவரும்
அடிப்படை உரிமைகளைக்
கொய்தவரும்
தமிழ் இனத்தவரா?
தமிழ் இனத்திலும்
இப்படி ஒரு மனத்தவரா?
அந்தோ! தமிழனே,
குருதி கொதிக்கிறது! - இந்தக்
குவலயம் எங்கே
நம்மை மதிக்கிறது?
இந்தக் கொடுமை புரிந்தவரைத்
தப்பிக்க விட்டுவிட்டால்
அவப்பெயர் - நம்
நாட்டவர்க்கு வந்துசேரும்
மற்றவர்க்கும் இதே நிலை
வர நேரும்!
உழைப்பின் உன்னதம்
அறியாத அந்த உலுத்தருக்குத்
தக்கதொரு தண்டனை
தரவேண்டும்! - அவர்
பிரம்படியும்
பெறவேண்டும்!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|