|
நாடு வெள்ளையரின்
பிடியிலிருந்தபோது...
காடுகள் அழிக்கவும் மேடுகள் கரைக்கவும் - பின்பு
பால்மரம் நட்டுப் பக்குவமாய்ப் பாதுகாக்கவும் - அதன்பின்பு
மரஞ்சீவி பாலெடுக்கவும்
சாலைகள் அமைக்கவும் தண்டவாளம் போடவும்
கட்டடங்கள் நிறுவவும்
கடல்கடந்து வெள்ளையரால்
இந்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டோம்!
அவர் இடும் கட்டளைக்கெல்லாம்
உடன்பட்டோம்!
பிழைப்பதற்கு வழிகாட்டினரே,
என அவர்க்குக் கடமையும் பட்டோம்!
மற்றபடி,
செட்டிமார்களும் செல்வந்தர்களும்
திரவியம் தேட தாமாக வந்தனர்
அவரவர்க்குரிய தொழிலில்
ஈடுபட்டனர்!
பல ரப்பர் தோட்டங்கள் நிறுவினர்!
வேற்றினத்தவரும் கடன் வாங்கும் அளவு
செட்டிமார்கள் பீடுபெற்றனர்!
மேலும்...
ஏழை பாழைகள் பலர்
தாமாகவும் வந்தேறினர்!
கல்வி குறைந்தவர்
உடலுழைப்பு வேலைகளில்
சேர்ந்தனர்!
கல்வியறிவு பெற்றவர்
அலுவலகப் பணிகளில்
தேர்ந்தனர்!
இதுவே நமது வரலாறாகாது!
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்
நம்மவர்கள் இம்மண்ணை ஆண்ட வரலாறு உண்டு...
நமது மூதாதையர்கள்
இந்த நாட்டின் வளர்ச்சிக்கும்
பொருளாதார மேன்மைக்கும்
உடலையும் உயிரையும்
துச்சமாக எண்ணித்
தம்மையே அர்ப்பணித்தனர்!
இருந்தும்,
ஏன் நம்மைப் புறக்கணித்தனர்?
இவ்வேளையில்...
நாட்டின் பிரதிநிதிகளுக்கு
சுதந்திரம் பெற்றுத்
தோள் நிமிர்ந்து வாழும்;
சிந்தனை உதித்தது! - அது
எரிமலை குழம்பாய்க்
கொதித்தது!
மலாயர், சீனர், இந்தியர்
கட்சிகளின் பிரதிநிதிகள்
சந்தித்தனர் - பின்
வெள்ளையரை எதிர்க்கச்
சம்மதித்தனர்!
மூவினக் கட்சிகளும் தோழமைகொண்டு
ஒரே கட்சியாய் ஒன்றுபட்டனர்!
சுதந்திரச் சுலோகங்களை ஏந்தி
வெள்ளையரை எதிர்த்து முழக்கமிட்டனர் - அது
விண்ணையும் சென்று தொட்டன!
வெள்ளையர் கொஞ்சம்
கலக்கமுற்றனர்!
எங்கும் சுதந்திர தீ!
பற்றிக்கொண்டது! - அது
வெள்ளையர் கழுத்தை
அரவம்போல் சுற்றிக் கொண்டது- பயம்
அவரைத் தொற்றிக் கொண்டது!
சில தினங்களில்
மூவினக் கட்சிகளின் போராட்டம்
வெற்றிகண்டது!
ஆம்! பெற்றுவிட்டோம்!
சுதந்திரம் பெற்றுவிட்டோம்!
மூவினக் கட்சிகளின்
ஒற்றுமையாலும் உறுதியாலும்
சுதந்திரம் பெற்றுவிட்டோம்!
விடுதலை! விடுதலை! விடுதலை!
சுதந்திரம் பெற்றதுமுதல்
இந்தநாள்வரை
இன்னும்
உரிமைக்குப் போராடுகிறோம்!
அடித்தளத்தின் வேர் ஆடுகிறோம்!
கோரிக்கை விடுக்கிறோம் - விடுத்தது
மறுக்கபடுகிறதே - என்று
நெஞ்சம் கடுக்கிறோம்!
இருக்கின்ற உரிமைகளும்
பறிக்கப்படுகிறதே - என்று
பிரதிநிதிகளிடம் சொல்லிக் கதறுகிறோம்!!
தர்மம் இல்லையோவென
மனம் கதறுகிறோம்!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|