|
மாணவர்களே! - தமிழ்
மாணவர்களே!
எங்கே போய்க்கொண்டிருக்கின்றீர்கள்?
என்ன சிந்தனையில் இருக்கின்றீர்கள்?
நாட்டு நடப்புத் தெரிகின்றதா?
நாளை நம் நிலை புரிகின்றதா?
எதிர்கால சவாலை
அறிந்திருக்கின்றீர்களா?
அதற்குரிய திட்டத்தை
அமைத்திருக்கின்றீர்களா?
இன்றிருக்கின்ற மாணவர்கட்கு
ஈன்றவர்கள் படும் சிரமங்கள்
என்னவென்று தெரியவில்லை!
எடுத்துச் சொன்னாலும் புரியவில்லை!
கல்வியின் மேன்மை புரியாமல்
காலத்தின் அருமை தெரியாமல்
கால்போன போக்கில் அலைவதும்
காலித்தனச் சேட்டைகள் செய்வதும்
பலர் கூடும் இடங்களில்
பார்ப்பவர் அருவருக்க
காதல் லீலை புரிவதும்
கண்ணியமின்றி நடப்பதுவும்
அன்றாடும் நாம் காணும்
அசிங்கங்கள் என்சொல்ல!
பிள்ளைகள் நன்றாகப் படித்துப்
பெரிய வேலையில் அமரவேண்டும்
எனும் கனவில் இரவுபகல் என்றில்லாமல்,
உணவகங்களில் எச்சில் பாத்திரங்கள் கழுவி
ஈட்டுகின்ற வருமானத்தில்
பெற்ற பிள்ளைகளின் கல்விக்குப்
பெரிதும் செலவிடும் பெற்றோர்கள்!
விடியும் காலைப்பொழுதில்
வீட்டுக்கு வீடு சென்று
அழுக்குத் துணி துணிதுவைத்து
அதில் வரும் வருமானத்தைக்
கல்வி பயிலும் தம் பிள்ளைகளின்
கல்விக்குச் செலவிடும் பெற்றோர்கள்!
பகலிரவு பாராமல்
பகுதிநேர வேலைசெய்து
படிக்கும் தம் பிள்ளைகட்கு
பணம் தேடும் பெற்றோர்கள்!
இப்படியாகப் பிள்ளைகளின்
எதிர்காலமே வாழ்வென்று
தம்மையே அர்ப்பணிக்கும்
அம்மையும் அப்பனும் தெய்வங்கள்!
அவர்களின் நம்பிக்கையையும்
ஆசைக் கனவையும்
அழிக்க நினைக்கலாமா?
அப்படியே அழிக்க நினைத்தால்
அது உங்களையே நீங்கள்
அழிப்பதற்கு ஒப்பாகும்!
அறிவுகண்ணைத் திறவுங்கள்!
கல்வியில் தேர்ச்சி ஒன்றே - நீங்கள்
கடைபிடிக்கும் குறிக்கோளாகவும்
கொள்கையாகவும் இருக்கட்டும்!
குவியும் இனி வெற்றிகள்!
கல்வியின் வெற்றிக்குப்பின்
கனவுகள் நிறைவேறட்டும்!
பெற்றவரும் மற்றவரும்
பெருமை கொள்ளும் வகையில்
வெற்றியை நாடி உழையுங்கள்!
மற்றவை தேடிவரும்!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|