|
பச்சை பசும் மலைகளையும்
பரந்து கிடக்கும் வெளிகளையும்
பார்த்துக் களிக்க முடியவில்லை!
பாழும் புகை மூட்டத்தால்!
நீசர்கள் மூட்டிய புகையாலே
நீல நெடு வானையும்
நீந்தி ஓடும் முகிலையும்
நேரே காண முடியவில்லை!
மூடர் செய்த செய்கையால்
மூலை முடுக்கெல்லாம் வந்து
மூண்டு விட்டது புகை ஐயோ!!
மூச்சிழுக்கவும் முடியவில்லை!
நேற்றுவரை தூய்மையாய் இருந்த
காற்று மண்டலத்தை, உவமைப்படி
ஊற்று நீரைச் சேற்று நீராக்கிவிட்டனர்!
சோற்றுக் கலையும் சோம்பேறிகள்!
கயவர்கள் ஏவிய புகையாலே
காலையில் கதிரவன் உதயத்தைக்
கண்டின்புறவும் முடிவில்லை!
காற்றிலும் நல்ல குளிர்ச்சியில்லை!
மதியிலிகள் மூட்டிய புகையாலே
மாலை நேரம் மேற்றிசையில்
வண்ண மேகக் கோலங்களை
மனம் சுவைக்க முடியவில்லை!
துப்புக் கெட்டவர் ஏவிய புகையாலே
சோலையில் அமர்ந்திட முடியவில்லை!
தூசுபோல் எங்கும் புகைமூட்டம்!
சுற்றுச் சூழலே கெட்டுவிட்டது!
விண்ணின் கூரையில் ஓட்டையாம்!
வெப்பம் பூமியில் ஏறுகிறதாம்!
விளங்காத வீணர்களின் செய்கையால்
விரைவில் இப்பூமி அழியுமோ?
இயற்கையின் எதிரிகளை இனங்கண்டு
இரக்கமின்றித் தண்டிக்க வேண்டும்!
இன்றேல், நாம் இயற்கையால் அழிவதை
இறைவனும் தடுக்கக் கூடுமோ?
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|