|
வாழ்த்திசைப் பறவைகள் இசைத்திட - வானம்
வண்ணத்தி லேஎழில் கோலங்கள் வரைந்திட!
கீழ்த்திசைக் கதிரவன் சிரித்திட - இன்பக்
கிளுகிளுப் பூட்டும் தீபாவளி பிறந்ததே!
அன்றலர்ந்த மலர்முகப் பிள்ளைகள் - புத்
தாடையில் களிகொண்டு துள்ளிடும் காட்சிகள்!
என்றுமில் லாதஇன் பத்திலே - அங்கு
ஈன்றவர் உவந்திடும் அழகினைக் கண்டிரோ!
நங்கையர் தேர்களைப் போலவே - எங்கும்
நடைபயின்று உலாவரும் கண்குளிர் காட்சிகள்!
பொங்குசெந் தமிழ்இளங் காளையர் - அந்தப்
பூவையர் எழில்கண்டு சொக்குதல் கண்டிரோ!
அண்டைவீட்டு அயலின நண்பர்கள் -சூழ
அன்பொளி தவழ்ந்திடும் இல்லங்கள் எத்தனை!
கண்டவர் முகமெலாம் அன்பொளி! - அதைக்
காண்பவர் முகத்திலும் அன்பொளி அன்பொளி!
பட்பட் படபட் பட்டென - எங்கும்
பட்டாசு முழங்கிடும் முரசொலி கேட்டிரோ!
பற்பல வாண வேடிக்கைகள் - இரவைப்
பகலெனச் செய்திடும் காட்சிகள் காணிரோ!
ஒன்றினைத் திடும்பெரு நாளிது - நம்
உள்ளத்தில் அன்பொளி ஏற்றிட வந்ததே!
நன்றிது! நன்றிது! வாழ்கவே - இனி
நாள்தொறும் வாழ்விலே அன்பொளி சிறக்கவே!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|