|
எண்ணிறந்த முயற்சியினால்
இக்கால மானிடன், அவ்
வெண்ணிலவில் குடிபுகுந்து
விண்ணுலகம் ஒன்றமைத்து
மண்ணுலகின் துன்பங்களை
மறந்திருக்க அங்குசெல்வான்
திண்ணமது நிறைவேறும் செகத்தீரே
காண்பீரே!
தேனிலவு கொண்டாடும் திருநாளை
மானிடன், அவ்
வானிலவில் இனியமைப்பான்
வரும்நாளில் காண்பீர்! விஞ்
ஞானமதால் விளைகின்ற நள்மையினை
என்சொல்வேன்!
நானிலத்தில் நான்வாழ்ந்து
நாளையிதைக் காண்பேனோ?
கணினிகளின் துணையாலே
கன்னிநிலவினில் நாளை
அணுபிளக்கும் ஆலைகளும்
அறிவியக்கச் சாலைகளும்!
இணையவழி கல்விபெற யாவரும்நல்
அறிவுபெற!
துணையிருக்கும் தொழில்நுட்பம்
சொல்வதுமெய் பொய்யில்லை!
முன்னேற்றம் பலகாணும் முழுநிலவில்
வருநாளில்
தன்னாலே மழைபொழியும் சாத்தியமும்
உண்டாகும்!
பின்னங்குப் பொழில்வளரும்
பிறிதுயிர்கள் அங்குய்யும்!
பொன்னான உலகொன்று புதுமுறையில்
அங்கமையும்!
நில்லாது வளர்ந்துவரும் நேரிய
விஞ்ஞானத்தால்
இல்லாத வழக்கெல்லாம் இனிநாளை
செயலாகும்!
கல்லாரும் காசுபணம் இல்லாரும்
காணாத
உல்லாச உலகமையும் ஒளிசிந்தும்
விண்ணிலவில்!
அதிகார ஆணவமும் அடுக்காத
கொடுமைகளும்
மதியற்று மண்ணுக்கு
வன்சண்டையிடும் போக்கும்
சதிசெய்யும் பேதைமையும்
தாழ்வுயர்வும் இல்லாத
புதிதான உலகமையும் பொன்னிலவில்
நாளைகாண்!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|