|
தூங்கிய தமிழ ரெல்லாம் துயிலெழுந்து விட்டார்! நம்மில்
ஓங்கிய(து) ஒற்று மையே! உலுக்கினோம் உலகி னையே!
தாங்களே தலைமை தாங்கும் தலைவர்க ளென்று, வேடம்
தாங்கிய தலைவ ரெல்லாம் தடதட ஆட்டம் கண்டார் !
வக்கணைப் பேச்சுப் பேசி வாய்ப்பறை கொட்டும் இந்த
மக்கிய தலைமைக்(கு) இன்னும் வாக்களிப் பதுவும் நன்றோ?
அக்றை கொண்ட அந்த ஐவரின் விடுதலைக்கு
மக்களின் சக்தி மீண்டும் மடைதிறந் தோட வேண்டும்!
வாய்ப்புகள் இருந்த போதும் வந்(து)அது சேர வில்லை!
ஏய்ப்பதில் சூரர் யாவும் இடுப்பிலே சுருட்டி விட்டார்!
காய்ப்பது கனி மரந்தான் கைகளில் கிடைப்ப தில்லை!
தேய்ப்பிறை போலத் தேய்ந்து தேய்ந்துதான் போனோம் கண்டீர்!
கிடைப்பதைச் சுருட்டி கொள்வார் கேள்விகள் கேட்டு விட்டால்
படைபலம் காட்டி நம்மைப் பயங்கொள்ளச் செய்வார்! அந்தோ!
விடைதருவார் என்றாலும் விளங்குவ தில்லை! இந்த
நடைமுறை தொடர்ந்து வந்தால் நமக்(கு)உயர் வுண்டோ சொல்லீர்?
நாளைய தலைமுறைகள் நன்மைகள் பெறுவ தற்கும்
காளையர் பூவையர் தம் கனவுகள் பலிப்ப தற்கும்
ஊளையர் தலைமை நீக்கி உருப்படி சேர்க்கும் நல்ல
ஆளைநாம் நிறுத்தி வைப்போம்! அனைவரும் ஒத்துழைப்பீர்!
பிளவுபட் டிருந்த ஈனப் பேதைமை போதும் போதும்!
வளர்ந்திட வழிகள் உண்டு மனமது ஒன்று பட்டால்!
கிளர்ந்தெழும் படைகள் கொண்டு கேடர்தம் ஆளு மையைத்
தளர்ந்திடச் செய்வோம் வாரீர்! தடைகளை உடைப்போம் வாரீர்!
சரிவிலே பொருளாதாரம் சரிசெய்யும் தலைமை யில்லை!
உரிமையைத் துணிந்து கேட்கும் உறுதிகொண் டாரும் இல்லை!
பரிந்துரை செய்வ தல்லாம் பழங்கதை என்றறிந்தோம்!
தரித்திரம் விட்டுப் போகத் தலைமையில் மாற்றம் வேண்டும்!
வரும்படி குறைந்திருக்கும் வறுமையில் வாடி நிற்கும்
பெரும்படி நமது மக்கள் பின்னிலை அடைந்திருக்க
ஒருசிலர் உயர்வைக் காட்டி உயர்ந்திட்டார் நம்மோர் என்று
பொருந்திடாப் பொய்யுரைக்கும் போக்கினி வேண்டாம் ஐயா!
பேர்தரம் கெட்ட பின்பு பேசிடும் பேச்சுக் கிந்த
ஊர்தரும் மதிப்பொன் றில்லை ஊர்மக்கள் தெளிந்து விட்டார்!
தேர்தல் நெருங்கும் போது செயல்பெறும் திட்ட மென்பார்!
யார்தலை உருட்டு கின்றார்? ஏய்த்தது போது மய்யா!
ஆடிய ஆட்டம் போதும்! ஆணவ பேச்சும் போதும்
தேடிய செல்வம் போதும்! செய்த சேவையும் போதும்
வாடிய ஏழை மக்கள் வளம்பெற வேண்டின் இங்குக்
கூடிய விரைவில் மாற்றம் கொணர்ந்திட வேண்டும்! வேண்டும்!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|