|
ஒன்றுபட்டு வாழும் உயர்நோக்கை மாந்தரிங்கு
என்றுதான் சிந்தையில் ஏற்றுவர் என்தோழி?
எட்டப்பர் என்னும் இழிந்தவர் இங்கில்லாமல்
ஒட்ட நொறுக்கினால் ஒன்றாவர் என்தோழி !
வாழ்வில் ஒருவன் வளமடைந்தால் அன்னவனை
வீழ்வுறச் செய்ய விழைபவர் யார்தோழா?
தன்னைப்போல் மற்றவனும் தாழ்ந்திருக்க வேண்டுமெனச்
சின்னபுத்தி கொண்டிருக்கும் தீயவர்தான் என்தோழி!
சமயத்தில் மேலென்றும் தாழ்வென்றும் பேசி
சமரச வாழ்வினைச் சாகடிப்பார் யார்தோழா?
மனிதனாய்த் தோன்றி மழுங்கையாய் வாழும்
சனியன்கள் தானிந்தச் சத்தியர்கள் என்தோழி!
இறைவன் இருககும் இடத்தை மறந்து
நெறியின்றி வாழ்கின்ற நீசர்கள் யார்தோழா?
சகோதரத் தன்மையைச் சற்றேனும் பேணாத்
தகவிலா ஈனச் சழக்கர்தான் என்தோழி!
சாதியில் மேல்படி தாழ்படி என்றிங்கே
பேதங்கள் பேசிடும் பேதையர் யார்தோழா?
கேணியில் ஆழ்ந்து கிடக்கும் தவளைகள்தான்
கோணல்மதி கொண்டஇக் கூறுகெட்டார் என்தோழி!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|