|
சிற்றெறும்பைப்போல் உழைத்துச் செல்வங்கள் சேர்த்திடுவோம்!
கற்றறிந்த வல்லவராய்க் கல்வியிலே சிறந்திருப்போம்!
உற்றவரைப் போலிந்த உலகோடு பழகிடுவோம்!
மற்றவரும் வாழ்வதற்கு வழிவகைகள் சொல்லிடுவோம்!
கொன்றழிக்கும் அச்சத்தைக் குழிதோண்டிப் புதைத்திடுவோம்!
குன்றினைப்போல் நிமிர்ந்திருப்போம் கூனுவதை விட்டொழிப்போம்!
தொன்றுதொட்டு வரும்ஈன தொல்வழக்கைத் துடைத்தொழிப்போம்!
என்றும்நமை வாழவைக்கும் இயற்கையினைப் போற்றிடுவோம்!
காளையரும் பாவையரும் கட்டொழுங்கைப் பேணிடுவோம்!
ஆளுந்திறம் கற்றிடுவோம் ஆட்சிமுறை அறிந்திடுவோம்!
தாளைப் பணிந்திருக்காமல் தன்மானம் காத்திடுவோம்!
நாளைவரும் காலத்தின் நடையறிந்து செயல்புரிவோம்!
வள்ளுவரின் குறள்நெறியை வாழ்வினிலே கடைபிடிப்போம்!
அள்ளுசுவைக் காவியங்கள் அத்தனையும் பயின்றிடுவோம்!
தெள்ளுதமிழ்ப் புலவர்களின் தேவாரப் பாட்டிசைப்போம்
உள்ளமதில் தாய்த்தமிழை உயிராக மதித்திடுவோம்!
சீரான நூல்நிலையம் தெருவெங்கும் அமைத்திடுவோம்!
தீராத பற்றுகொண்டு செந்தமிழில் கவியிசைப்போம்!
ஊரெங்கும் தமிழ்ப்பள்ளி ஒன்றிருக்க வழிசெய்வோம்!
யாரிங்குத் தடுத்தாலும் இன்தமிழ்க்கே முதன்மை செய்வோம்!
யாவருக்கும் வீ (டு) இருக்க எவ்வகையும் முயன்றிடுவோம்
பூவனங்கள் அமைத்திடுவோம் பொழில்வளர்த்து நிழல்பெறுவோம்!
கோவிலுக்குச் சென்றிடுவோம் குலதெய்வம் போற்றிடுவோம்!
தேவைகளை நிறைவேற்றிச் செகம்புகழ வாழ்ந்திடுவோம்!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|