|
மடிதெரிய சேலைகட்டும் வண்தமிழ்ப்பெண் குலமே, நும்
வடிவழகைக் காட்டிடவோர் வரம்பிருக்க வேண்டுமம்மா!
கடுகளவும் கூச்சமின்றிக் கனிவுடலை வெளிகாட்டித்
திடமனத்துக் காளையரைத் திண்டாடச் செய்வதுவோ?
அரைகுறையாய் அந்தரங்க அழகெல்லாம் வெளிகாட்டும்
அரியதமிழ்ப் பெண்களே! அழகுதமிழ்க் கண்களே!
திரைமறைவாய் இருப்பதனை தெரியும்படி காட்டுவது
வரைமுறைகள் கொண்டதமிழ்ப் பண்பாட்டுக்(கு) அழகாமோ?
காலமெல்லாம் காத்துவரும் கன்னித்தமிழ்ப் பண்பாட்டைக்
கோலமிகு சேலைகட்டி கொடியிடையின் விளிம்பினிலே
ஏலம்விடு கின்றீரே! என்னென்பேன் நும்செயலை!
ஞாலமிது நமைக்கண்டு நகையாடச் செய்வதென்ன!
பெண்ணுக்குப் பெருமைதரும் பெற்றிமிகு நாணத்தை
விண்ணுக்கு அனுப்பிவிட்டு மெல்லியரே காளையர்தம்
கண்ணுக்கு விருந்தளிக்க கண்டபடி சேலைகட்டி
மண்ணுக்குள் புதைத்தீரே மாத்தமிழர் பண்பாட்டை!
வளர்ச்சியினை எட்டாத வளர்தமிழ்ப்பெண் குலமின்று
கிளர்ச்சியினைத் தூண்டுமொரு கேவலத்தில்
வளர்ந்ததென மொழியுமிந்த வையகம்காண்! மேனியெழில்
விளம்பரங்கள் இனியேனும் வேண்டாமே பெண்குலமே!
சிற்றிடையின் எழில்காட்டி சிருங்கார இரசமூட்டும்
பெற்றியிலாப் பெண்குலமே பேணும்பண் பாடிதுவோ?
சற்றழகு காட்டுவது தப்பில்லை என்றாலும்
மற்றவரின் கேலிக்கு வழிவகுக்க விடலாமோ?
திருவிழா காலங்களில் சேலைகளின் விளம்பரம்போல்
பருவஎழில் பாவையரின் படுகவர்ச்சி பவனியடா!
தெருவினிலே காளையரின் சீழ்க்கையொலி பறக்குதடா!
உருப்படுமோ சமுதாயம் உன்னதநம் பண்பாடும்?
குறைந்தஅள வேதுணியில் கூச்சமின்றி உடல்காட்டி
நிறையழிக்கும் கவர்ச்சிக்கு நிலைத்திருக்கும் மதிப்பில்லை!
மறைந்திருக்கும் பொருளுக்கே மதிப்பதிகம்!
திறந்தமனம் கொண்டிருக்கும் சேயிழையீர் மறவாதீ்ர்!
எழில்சேர்க்கும் சேலையினை இழித்துரைக்கும் படியுடுத்தி
விழிக்கின்ப விருந்தளிக்க விழைகின்ற பெண்குலமே!
வழிகாட்டும் நீங்களே வகைத்தவறிப் போவதால்
பழிசேரும் அன்றோ நம் பண்பாட்டுக்(கு) என்கின்றேன்!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|