|
சமயத்தில் உயர்வுதாழ்வு பேசிடும் நடையர் - நெறியின்
தன்மையை உண்மையில் அறிந்திடா மடையர்!
சமரச வாழ்வினைப் போற்றிடாக் கடையர் - இத்
தரணியில் உய்யினும் வீண்கழி சடையர்!
சாதிகள் வேண்டுமென்று அடஞ்செய்யும் புல்லார் - அவர்
சாத்திரம் ஆயிரம் கற்பினும் கல்லார்!
மாதரை அடிமைபோல் நடத்திடும் பொல்லார் - அவர்
வண்மையாம் ஆண்மையின் தன்மையே இல்லார்
பிறர்குடி கெடுப்பதில் கிஞ்சிற்றும் நாணார் - வாழ்வில்
பெருமையும் பெற்றியும் அமைதியும் காணார்!
அறவழி நின்றுயிர் வாழ்வினைப் பேணார் - அவர்
ஆண்டவன் அருளினை இம்மியும் பூணார்!
கருப்பென்றும் சிவப்பென்றும் பிரிவினை செய்வார்! - அவர்
காட்டு விலங்கினுக்கு ஒப்பென உய்வார்!
பொருள்படைத்து அகந்தையில் எளியரை வைவார் - அவர்
புண்ணியம் இழந்தொரு காலத்தில் நைவார்!
மற்றவர் உரிமையைப் பறிப்பதில் வல்லார் - இந்த
மண்ணிலே என்றென்றும் நிலையென நில்லார்!
கற்றவர் ஆயினும் நல்லசொல் இல்லார் - அவர்
கல்விஇல் லாதவர் போலவே செல்லார்
அடுத்தவர் உயர்வதைச் சகித்திடா அற்பர் - அவர்
ஆயுள் வரையிலும் கீழ்நிலை நிற்பர்!
கெடுவழி நடப்பதில் விழைந்திடும் சொற்பர் - அவர்
கேவலம் தன்னுயிர் மானமும் விற்பர்!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|