|
பஞ்சாபி உடையணியும் பைந்தமிழ்ப்பெண் பாவையரால்
பஞ்சாகிப் பறக்குதம்மா பண்பாடு தமிழ்ப்பண்பாடு!
அஞ்சாறு வயதினறும் அணிகின்றார் என்செய்வேன்!
பஞ்சமோ சேலைக்கும் பாவாடை தாவணிக்கும்?
பொன்னழகு சேலைகட்டி வாசமல்லிப் பூச்சூடி
சின்னமலர்ச் சிரிப்போடு சிற்றிடையும் அசைந்துவர
அன்னநடை பயிலும்ஓர் அணங்குக்கும் ஈடுண்டோ?
இன்னுயிர்நம் பண்பாடே ஏந்திழையர் வசமன்றோ?
கண்பார்க்கத் திகட்டாத கலைவண்ண சேலைகட்டி
மண்பார்த்து நடைபயிலும் மாதர்குலம் குறையுதம்மா!
பெண்பாவை யர்கூட்டம் பிறஉடையைப் போற்றுவதால்
பண்பாட்டு உடையெல்லாம் பயன்குன்றிப் போகுதம்மா!
எத்தனைதான் வேற்றுடைகள் எழிலோடு பூண்டாலும்
அத்தனையும் சேலைதரும் அழகுக்கு நிகராமோ?
முத்தமிழ்பெண் குலமே! நும் முன்னழகும் பிள்னழகும்
சித்தரித்துக் காட்டும்எழில் சேலைக்கு ஈடாகுமோ?
பருவத்தை எட்டியதும் பாவாடை தாவணியில்
உருவத்தில் எழில்விளங்க உலவுகின்ற பாவையரை
இருகண்ணால் பாராத இளநெஞ்சும் ஒன்றுண்டோ?
வருங்காலப் பெண்குலமே, வளர்கபண்பாடு உம்மாலே!
நாணுகின்ற இயல்பிருக்கும் நல்லதமிழ் நங்கையர்க்கு
பூணுகின்ற உடைகளிலே புடவைஒன்றே பொருத்தமென்பேன்!
காணுகின்ற கண்களுக்குக் களிப்பூட்டும் சேலையன்றி
பேணுகின்ற பிறஉடைகள் பெருமைதர வழியுண்டோ?
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|