|
கருப்புத்தான் அழகடி ராணியே - உன்
கண்களில் ஏனடி சோகம் வீணிலே!
கருப்பி கருப்பி என்றுசொல்லி
கண்ணே உன்னை வைபவரை
அறிவு கெட்ட வீணரென்றே
அலட்சியம்நீ செய்திடுவாய்!
கருப்புத்தான் அழகடி ராணியே...
இறைவன் கருப்பி லன்றோபேர்
எழிலை மறைத்து வைத்துள்ளான்!
முறையே இதைநீ அறிந்திடுவாய்
மூடர்க் கிவைகள் தெரிவதில்லை!
கருப்புத்தான் அழகடி ராணியே...
கருமை என்றும் தாழ்ந்ததில்லை
கண்ணே வேண்டாம் தாழ்வெண்ணம்!
கரியில் இருந்தே வைரங்கள்
கண்டு பிடிக்கப் பட்டதுகாண்!
கருப்புத்தான் அழகடி ராணியே...
முகத்தில் கரிய புருவமின்றேல்
முகம்தான் முகமாய் இருப்பதுண்டோ?
வகை தெரியாத வீணர்களின்
வார்த்தை கேட்டா வருந்துவது!
கருப்புத்தான் அழகடி ராணியே...
அழகின் மகிமை நிறத்திலில்லை
அரிய அன்பில் உள்ளதடி!
சழக்கர் சொல்லும் வார்த்தைக்குச்
சற்றும் நெஞ்சம் கலஙகாதே!
கருப்புத்தான் அழகடி ராணியே...
சிரித்த முகத்தோ டிருந்திடுவாய்!
சிறுமை எண்ணம் போக்கிடுவாய்!
உரிய பண்பைப் பேணிடுவாய்!
உன்னை வெல்வார் எவருமில்லை!
கருப்புத்தான் அழகடி ராணியே...
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|