|
இரக்கமே இல்லாப் பேய்போல் இங்குமற்று ஊனை வாய்நீர்
சுரக்கவே உண்டு வந்தேன் சொல்லவும் கூசு கின்றேன்!
அரக்கரின் இனத்தில் சேர்ந்தேன் ஐயகோ! என்ன செய்வேன்?
மரக்கறி உணவே உண்ணும் மனிதரைப் போற்று கின்றேன்!
சின்னமுள் தைத்த போது சிலகணம் துடித்து விட்டேன்!
இன்னதோர் தன்மை தானே ஏனைய உயிர்க ளுக்கும்!
இன்னலில் துடிதுடிக்க எத்தனை உயிரைக் கொன்றேன்!
உன்னத உயிரைக் கொல்லும் உலுத்தனாய் ஆனேன் அச்சோ!
மன்னுயி்ர் எல்லாம் இங்கு வாழ்வினை விரும்ப லன்றி
இன்னுயிக்கு இறுதி தேட இசைவதும் கண்ட துண்டோ?
என்னதான் கற்றி ருந்தும் இரக்கமற்று உயிரைக் கொன்று
தின்னவும் செய்தேன் ஐயோ! தீருமோ என்றன் பாவம்?
துயிலெழச் செய்யும் சேவல் தொண்டையில் கத்தி வைத்துக்
கயவனைப் போல் அறுத்து கறிசமைத்து உவக்க உண்டேன்!
துயருறும் உயிரைக் கண்டு துளி அளவேனும் நெஞ்சில்
தயவினைப் பெற்றேன் இல்லை தர்மமும் மறந்தேன் நீசன்!
நிலையிலா உடல் வளர்க்கும் நேசத்தால் குற்ற மற்ற
அலைகடல் மீனும் நண்டும் ஆடு வான்கோழி என்றும்
கொலைபல செய்து ஊன் உண்டேன் கொடியவன் ஆனேன் அச்சோ!
புலையன்என் வாழ்வில் நல்ல புண்ணியம் சேர்வ துண்டோ
சத்தையும் ஊட்டத்தையும் தரும்நல்ல தானியங்கள்
எத்தனை கனிவகைகள் இணையிலாக் கீரை காய்கள்
சுத்ததேன் பால்நெய் எல்லாம் மொத்தமாய் இருக்க ஏனோ
புத்திகெட்டு உயிரைக் கொன்று புசித்திட விழைந்தேன் ஈனன்!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|