|
காதிலே காதணியும் கைமுழமே தலைமயிரும்
கோதையரின் நகலெடுத்துக் குண்டர்களின் உருவெடுத்து
வீதியிலே வெறுமெனவே திரியும்இள வட்டங்கள்
பேதமின்று புரியவில்லை பேதையர்க்கும் காளையர்க்கும்!
திரைபடத்துக் கற்பனையில் சிக்குண்டு சீரழியும்
வரம்பிழந்து அலைகின்ற வருங்காலத் தலைவர்கள்
உரமிழநத உடல்வாகும் உறுதியற்ற மனப்போக்கும்
உரியதெல்லாம் விட்டலையும் ஊனமிக்க தலைமுறைகள்!
வள்ளுவமும் வள்ளலார் வாய்மொழியும் எடுத்துரைத்தால்
எள்ளிநகை யாடுகின்றார் இவ்வுலக வாழ்க்கையிலே
கொள்ளுவதை விட்டுவிட்டுக் கூடாத வகைகளிலே
துள்ளிவிழும் காளையர்கள் துடுப்பிழந்த படகன்றோ?
கல்வியிலே சிறந்தோங்கக் கற்கின்றார் வேற்றினத்தார்!
செல்வநிலை செழிக்கதினம் உழைக்கின்றார்! இவர்க்கிடையில்
நல்வழியைப் பேணாது நலிந்துவரும் நமதிளையோர்!
வெல்வதற்குத் திறனின்றி வீணிலிங்குத் தாழ்வாரோ?
நாட்டுநடப் பறியாமல் நாலுபேர் கூடுவதும்
ஆட்டமிட்டுப் பாடுவதும் அளப்பதுதான் இவர்வேலை!
பாட்டனார் சொத்துமில்லை பாவம்இவர் நாளையிங்கு
தோட்டமில்லா வெறுநிலமாய்த் தோன்றுவது மெய்யன்றோ!
ஆற்றலுக்கு மாற்றுருவம் அறிவுமிக்க இளைஞர்காள்!
மாற்றமொன்று வேண்டுமிங்கு மற்றவரைப் பாருங்கள்!
ஏற்றமொன்றே குறியாக இரவுபகல் பாராமல்
ஆற்றுகின்றார் காரியங்கள் அவர்வழியைப் பற்றிடுவீர்!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|