|
நீச மிக்க நினைவுகளை
நெஞ்சில் நித்தம் பயிராக்கி
மாசு கொண்டு வாழுகின்ற
வறிய மாந்தர் உலகமடா!
வெண்மையென்றும் கருமையென்றும்
வீணில் பேதம் பேசுகின்ற
உண்மை யற்ற பேதையர்கள்
உலவு கின்ற உலகமடா!
மதத்தின் மீது வெறிவளர்த்து
மனித தர்மம் பேணாது
மதியிழந்து நெறிமறந்து
வாழும் ஈனர் உலகமடா!
இனத்தில் வேறாய் இருந்தாலும்
எல்லாம் ஒருதாய் மக்களென்று
நினைத்துப் பார்க்க மறுக்கின்ற
நீசர் வாழும் உலகமடா!
கடமைக்காக ஆண்டவனைக்
கையெடுத்துத் தொழுகின்ற
மடமை மிக்க கழிசடைகள்
வாழும் அற்ப உலகமடா!
சமரச சன்மார்க்க வழிதனைத்
தள்ளி விட்டுத் தயக்கமின்றி
அமைதி கெடுக்கும் கலகத்தில்
ஆவல் கொள்ளும் உலகமடா!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|