|
இருபத்தேழ் வயதடைந்தும் இன்னுமொரு வரனின்றிப்
பருவத்தே பயிர்செய்யாப் பாவையர்கள் எத்தனைபேர்!
ஒருசாதி சனத்துக்குள் உறவாடி மணமுடிக்கும்
திருந்தாத மூடர்களால் சேயிழையர் தவிக்கின்றார்!
முப்பத்தேழ் வயதாகி முடிந்தபின்னும் வாழ்க்கையில்லா
அப்பாவி பெண்களிங்கே ஆயிரம் ஆயிரம்பேர்கள்!
உப்பில்லாச் சாதியினை உண்மையென்று போற்றிவரும்
துப்பற்ற வீணர்களால் தோகையர்கள் நோகின்றார்!
தரமென்று நம்பிஒரு சாதியிலே மணமுடித்தால்
வரனின்றி வாடுகின்ற மாதர்குலம் பெருகுமடா!
அரம்போன்ற கூர்மையினர் அறிஞர்தம் சொல்மறந்து
மரம்போன்ற மாக்களாய் வாழ்வதுவும் நன்றாமோ?
இல்லறமே நல்லறமாய் என்றென்றும் போற்றிவர
நல்லதொரு குலமகளை நாடுவதை விட்டுவிட்டுத்
தொல்லைதரும் சாதியிலே துணைதேடும் வீணர்களால்
தொல்லுலகில் நம்பெண்கள் துடுப்பின்றி தவிக்கின்றார்!
எண்கடந்த எத்தனையோ இளம்பெண்கள் இதயங்கள்
புண்களெனப் போனதடா புழுதிகுப்பைச் சாதியினால்!
பெண்களுக்கு வேண்டுவது பெண்மையன்றிச் சாதியல்ல!
கண்களிரண்டு இருந்துமில்லாக் கருத்திழந்த மூடர்களே!
அளந்தறிய ஒன்றுமில்லை! அற்புதமும் ஏதுமில்லை!
பிளவுசெய்யும் சாதியிலே பித்துக்கொண் டலைகின்றீர்!
வளர்ந்துவரும் புதுவுலகில் மற்றவர்கள் நமைமதிக்க
உளம்தெளிவு பெறுவீரோ? உய்யும்வகை காண்பீரோ?
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|