|
தோட்ட காட்டு மக்களை எள்ளித்
தூற்றிப் பேசிடும் நீசரே, கேளீர்!
நோட்டஞ் சொல்லியே வாழ்வு நடத்தும்
நுமது புத்தியை என்ன வென்பேன்!
வாட்ட முற்றுத் தொல்லைகள் பட்டு
வாழ் நாளெல்லாம் இன்னலும் பட்டு
நாட்டுக் குயர்வு தந்தவர் தம்மை
நலிய பேசிநீர் மதி கெட்டீரே!
பூச்சிக் கடியுண்டும் உயிர் குடிக்கும்
பொல்லாப் பாம்பு கடியுண்டும்!
மூச்சிழந்து போனவர் தொகையை
முழுமை யாகச் சொல்லிடப் போமோ
ஏச்சும் ஏளனப் பேச்சும் ஒன்றே
இங்(கு) அவர் பெற்றிடும் அரியதோர் பரிசு!
சீச்சீ! என்னடா உலகம் ஈது
சிந்திக் காத சீர்கெட்ட உலகம்!
பயமிழைக்கும் பாம்புகள் உறையும்
பாழுங் காட்டிலே அஞ்சுத லின்றி
உயிரையுஞ் சிறு தூசென எண்ணி
உழைத்(து) உழைத்(து) இம்மலை நாட்டுக்(கு)
உயர்வு தேடித் தந்தவர் தம்மை
ஒரு பொருட்டாய் மதியா(து) இகழும்
தயவிலா நீசர்தம் இழிமிகு செயலைச்
சற்று நினைக்கையில் வெம்புதே உள்ளம்!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|