|
தமிழால் நாம் ஒன்றென்னும் தன்மான உணர்வுபெற்றால்
தமக்குள்ளே சண்டையிடத் தமிழனுக்கு மனம்வருமோ?
நமக்குள்ளே சண்டையிடும் நலியும்நிலை தொடர்ந்தால்,நம்
சமுதாயம் தரணியிலே தடையமின்றிப் போகுமடா!
ஒருதாயின் பிள்ளைகள்நாம்! உடன்பிறப்பு நாமெல்லாம்!
வருங்கால தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டுமன்றிப்
பொருந்தாத செயல்புரிந்து திருந்தாத மூடராய், நாம்
இருந்தாலும் வெட்கமடா! இறந்தாலும் ஈனமடா!
பகைமைநிலை வந்தாலும் பதற்றநிலை கண்டாலும்
தகைமைநிலை மாறாது தமிழரென்ற உணர்வோடு
வகையறிந்து செயல்புரிந்தால் வையத்தில் நமக்கெதிரே
புகைகிளப்பும் கேடரெல்லாம் புறமுதுகிட்டு ஓடாரோ?
நாளிதழைப் புரட்டினால் நாளுமொரு கொலைசெய்தி!
தாளவில்லை நெஞ்சமடா! தமிழனுக்குள் சண்டையிட்டு
மாளுவது வீரமோ? மறக்குலத்தின் தன்மையிதோ?
தோளுயர்ந்த தோழர்களே! சோதரர்நாம் மறந்தீரோ?
குலைநடுங்க உடன்பிறப்பைக் கொலைபுரியும் கொடுமையினைக்
கலை எனவோ நினைக்கின்றீர்? கழிவிரக்கம் அற்றீரே!
தலைகிறுக்குப் பிடித்தலையும் தரங்கெட்ட தமிழனே!
நிலைகுலைய செயல்புரியும் நீசருக்கும் வாழ்வுண்டோ?
ஒற்றுமையைக் கைகொண்டால் உலகத்தில் தமிழர்க்கு
மற்றவர்கள் இணையில்லை! வாயுரைத்தேன் பொய்யில்லை!
நற்றமிழர் நமக்குள்ளே நலிவுசெய்யும் பகைவேண்டாம்!
சிற்றறிவால் அழிகின்ற சீர்கேடு போதுமடா!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|