Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
சேலை
பூதலம் துப்புதடா
கருப்புத்தான் அழகு
அன்பைத் தேடி...
இன்றைய இளைஞர்
கேளடா தோழா
தன்மானம்
பஞ்சாபி உடை
கேளாய் தோழி
வாழ்வு தாரீர்
விதவை
தீபத் திருநாள்
அன்பொளி
வெம்புதே உள்ளம்
சாதி
மெய்யன்பு
மைக்கா
செகம் புகழ...
உலகம்
புண்ணியம்
உன்னைத்தான்
மானிடர்
அவன் செயல்
நிலவில் ஒரு...
ஒன்றுபடுவோம்
அடிநிலை
தலைமையில்...
சிந்தித்துப் பார்
சீர்கேடு போதுமடா
இன்பம் பொய்யாமோ
இது தருமமா
எழுக தமிழினமே
தமிழ் ஈழம்
 
 
 
 
கத்திவெட்டுக் காயமென்றும் கைகலப்பு மோதலென்றும்
நித்தம்வரும் செய்திகளை நினைத்துமனம் கலங்குதடா!
இத்தனையும் எவன்செய்தான் என்தமிழன்தான் செய்தான்!
புத்திகெட்ட தமிழனே பூதலமே சிரிக்குதடா!

தமிழர்கள் தன்மையிலே நாய்களுக்கொப் பாவராம்
சமுதாய நிலைகண்டு சாற்றினான் ஒருமேதை!
தமக்குள்ளே சண்டையிட்டுச் சாகின்ற தமிழர்காள்!
சுமக்கின்ற களங்கமிதைத் துடைத்தொழிக்க வல்லீரோ

வேற்றினத்தான் ஒருவனைப்போய் வெட்டினான் தமிழனென்று
நேற்றிலிருந்து இன்றுவரை நிலவுலகில் செய்தியில்லை!
தூற்றிடவும் பிறர்நம்மைத் தூவென்று துப்பிடவும்!
நாற்றிசையும் நாய்ச்சண்டை நமக்குள்தான் அட! இழவே!

ஒருத்தனைப்போய் ஒன்பதுபேர் உதைப்பதுதான் வீரமா?
பெருத்தஅவ மானமடா பேடியரின் வேலையடா!
வருத்தமே தோன்றுதடா! மறக்குலத்தில் பிறந்துவிட்டுப்
பொருத்தமிலாச் செயல்புரியும் பூரியரை என்னென்பேன்!

குறிக்கோளும் இல்லாது கொள்கைகளும் இல்லாது
வெறிநாய்கள் போலிங்கு வீதியிலே சண்டையிட்டும்
நெறிகெட்டும் அலைகின்ற நிலைகெட்ட தமிழனால்
அறிவார்ந்த தமிழனுக்கும் அவனியிலே மதிப்பில்லை!

அன்றுமுதல் இன்றுவரை அடிதடிக்கும் கொலைகளுக்கும்
ஒன்றுபடாப் புத்திக்கும் உலகத்தில் தமிழினத்துக்கு
இன்றுவரை இணையாக எவருமில்லை கண்டீரோ!
என்றுதான் என்தமிழன் ஏற்றத்தில் வாழ்வானோ?

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...