|
கத்திவெட்டுக் காயமென்றும் கைகலப்பு மோதலென்றும்
நித்தம்வரும் செய்திகளை நினைத்துமனம் கலங்குதடா!
இத்தனையும் எவன்செய்தான் என்தமிழன்தான் செய்தான்!
புத்திகெட்ட தமிழனே பூதலமே சிரிக்குதடா!
தமிழர்கள் தன்மையிலே நாய்களுக்கொப் பாவராம்
சமுதாய நிலைகண்டு சாற்றினான் ஒருமேதை!
தமக்குள்ளே சண்டையிட்டுச் சாகின்ற தமிழர்காள்!
சுமக்கின்ற களங்கமிதைத் துடைத்தொழிக்க வல்லீரோ
வேற்றினத்தான் ஒருவனைப்போய் வெட்டினான் தமிழனென்று
நேற்றிலிருந்து இன்றுவரை நிலவுலகில் செய்தியில்லை!
தூற்றிடவும் பிறர்நம்மைத் தூவென்று துப்பிடவும்!
நாற்றிசையும் நாய்ச்சண்டை நமக்குள்தான் அட! இழவே!
ஒருத்தனைப்போய் ஒன்பதுபேர் உதைப்பதுதான் வீரமா?
பெருத்தஅவ மானமடா பேடியரின் வேலையடா!
வருத்தமே தோன்றுதடா! மறக்குலத்தில் பிறந்துவிட்டுப்
பொருத்தமிலாச் செயல்புரியும் பூரியரை என்னென்பேன்!
குறிக்கோளும் இல்லாது கொள்கைகளும் இல்லாது
வெறிநாய்கள் போலிங்கு வீதியிலே சண்டையிட்டும்
நெறிகெட்டும் அலைகின்ற நிலைகெட்ட தமிழனால்
அறிவார்ந்த தமிழனுக்கும் அவனியிலே மதிப்பில்லை!
அன்றுமுதல் இன்றுவரை அடிதடிக்கும் கொலைகளுக்கும்
ஒன்றுபடாப் புத்திக்கும் உலகத்தில் தமிழினத்துக்கு
இன்றுவரை இணையாக எவருமில்லை கண்டீரோ!
என்றுதான் என்தமிழன் ஏற்றத்தில் வாழ்வானோ?
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|