|
எங்கெங்கு நோக்கிடினும் என்தமிழர் முகத்தினிலே
மங்காத பெருமகிழ்ச்சி வழிகின்ற காட்சியடா!
சிங்கார உடையணிந்து சிறியோரும் பெரியோரும்
அங்கங்கும் உலவுகின்ற அழகுமிகு காட்சியடா!
எத்திக்கைப் பார்த்தாலும் என்தமிழர் வீடெங்கும்
மத்தாப்பு கையேந்தி மனங்குளிரும் பிள்ளைகளின்
முத்தான காட்சியடா! முழுமகிழ்வின் மாட்சியடா!
தித்திக்கும் இத்தீபத் திருநாளைப் போற்றிடுவோம்!
தண்பூக்கள் பெண்ணாகித் தரணியெங்கும் ஈலவுதல்போல்
மண்பார்த்து நடைபயிலும் மாத்தமிழ்ப்பெண் பாவையர்கள்
பண்பாட்டு உடையணிந்து பைந்தமிழின் உருவாகக்
கண்பூத்து வருகின்ற காட்சியினைக் காணீரோ?
சீரழகு உடைபூண்டு திரண்டுவரும் காளையர்கள்
வீரநடை பயின்றெங்கும் வேங்கைபோல் உலவுகின்றார்!
பேருவகை அளிக்கும்அந்தப் பெற்றிமிகு காட்சிகண்டு
ஓர்அரிய வேகமென்றன் உள்ளத்தில் ஏறுதடா!
பாரெங்கும் ஓடிவரும் பலநதியின் சங்கமம்போல்
தூரத்தில் வாழ்கின்ற சொந்தங்களும் பந்தங்களும்
நேருக்கு நேர்வந்து நினைவெல்லாம் தித்திக்க
தீராத இன்பத்தில் திளைக்குதடா இந்நாளில்!
நனறடா! நன்றுநன்று நான்கண்ட காட்சிநன்று!
குன்றாத மகிழ்ச்சியிலே குதுகலிக்கும் என்தமிழர்
என்றென்றும் இதுபோல இன்பமுடன் இவ்வுலகில்
ஒன்றாக அன்பாக உளம்மகிழ வாழியவே!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|